அதிமுக – பாஜக கூட்டணி திமுகவை வீழ்த்த போதுமானதாக இல்லை என்று அமித்ஷா நினைப்பதாகவும், எனவே பெரிய கட்சி ஒன்றை கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அதிமுக – பாஜக கூட்டணி நிலவரம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மூன்றாவது தவணை தேர்தல் வாக்குறுதியில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உதவித் தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்குவதாக கூறியுள்ளார். இதுவரை திமுக அரசு வரியை உயர்த்தி, மக்களுக்கு சுமையை அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வந்தார். தற்போது வரிகளை உயர்த்தி, அதன் மூலம் நிதியை திரட்டி ரூ.10 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளார். நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை எடப்பாடி வழங்கியுள்ளார்.தேர்தலில் வெற்றி பெறவா போகிறோம்? சும்மா அள்ளிவிடுவோமே என்று தோன்றுகிறது. அதிமுகவின் அறிவிப்புகள் அவர்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வெளியிட்டது போன்று தோன்றுகிறது. காரணம் அவர்கள் உற்சாகப்படும் விதமாக எதுவும் நடக்க வில்லை. அதிமுக வாக்குகளை விஜய் பிரிப்பார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். மற்றொருபுறம் கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இணையவில்லை. அதிமுக உடன் சேர்ந்துள்ள கட்சிகளை ஒப்பிடும்போது தேமுதிக பெரிய கட்சிதான்.

தேமுதிகவுக்கு தென் மாவட்டங்களில் கணிசமான அளவு வாக்கு வங்கி உள்ளது. நாம் பேச விரும்பாவிட்டாலும் தேர்தலில் சாதியின் தாக்கம் என்பது உள்ளது. குறிப்பாக தெலுங்கு பேசும் நாயுடு சமுதாய மக்கள் வைகோ மீது ஒரு காலத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். விஜய்காந்த் வந்த பிறகு அவர் மீது தங்களின் பார்வையை திருப்பினார்கள். அந்த வாக்கு வங்கி தற்போதும் உள்ளது. கடந்த முறை விருதுநகரில் விஜயகாந்த் மகன், மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டி அளித்ததற்கு அது ஒரு முக்கிய காரணம். அதை வைத்து பார்க்கிறபோது சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். தினகரனுக்கு, முன்பு அப்படி இருந்தது. ஆனால் தினகரன் இன்றைக்கு அதிமுகவோடு போய் இணைந்துள்ளார். சசிகலா வேறு புதிய கட்சியை தொடங்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலனைவிட தன்னுடைய சுயநலத்திற்காக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கினார். அதனால் முக்குலத்தோர் சமுதாய மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நிற்பவர்களுக்கு தான் அவர்கள் வாக்களிப்பார்கள். இதனால் அதிமுகவுக்கு 2வது இடமாவது கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அவ்வளவு சீக்கிரமாக விட்டுக்கொடுப்பவர் இல்லை என்பது கடந்த தேர்தலில் சீட் ஒதுக்கீட்டில் காட்டினார். ஆனால் கடந்த முறை அவர் ஆட்சியில் இருந்தார். அடுத்தும் அவர் ஆட்சிக்கு வருவார் என்று பாஜக நம்பியது.அதனால் அவர் சொன்னதை கேட்டார்கள். ஆனால் இம்முறை அடிப்படி இல்லை. இந்த முறை பாஜக 72 தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் வழங்கியுள்ளதாகவும், அதில் 35 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று சொல்வதாகவும், இடங்களை உறுதிசெய்ய பியூஷ் கோயல் தமிழ்நாடு வர உள்ளதாகவும் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. பாஜக 35 இடங்கள் என்றாலும், அன்புமணிக்கு 17 இடங்கள் சொல்லப்படுகிறது. இவை தவிர்த்து தினகரன் மற்றும் சிறிய கட்சிகளுக்கு இடம் வழங்க வேண்டும். எனவே 150 இடங்களுக்குள்ளாக தான் அதிமுக நிற்க முடியும். அப்படி செய்தால் அதிமுகவால் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மையை பெற முடியாது. அதையே தான் பாஜகவும் விரும்புகிறது.

இதனிடையே, இந்த கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியாது என்று உள்துறை அமைச்சர் நினைப்பதாகவும், எனவே பெரிய சுறாவை கூட்டணிக்கு அழைத்துவர முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அந்த சுறாவும் தற்போது தனித்து விடப்பட்டதாக உணர்ந்து கொண்டிருக்கிறது. சேர்ந்தால் நல்லது என்று நினைக்கலாம். அப்படி ஒரு மெகா கூட்டணி அமைந்தால், அதற்குள் முரண்பாடுகள் அதிகம் இருக்கும்.அதனால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் போட்டி கடுமையாக இருக்கும். ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்றும், மற்றொரு நபர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டதாக சொல்கிறார். இதனை மற்றவர்களின் அனுதாபத்தை பெறவே செய்கிறார். சட்டப்பேரவையில் இறுதிக் கூட்டம் என்பதால் முதலமைச்சர், சபாநாயகரை சந்தித்து பேசியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில், சசிகலா, தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. கட்சியின் கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இடம்பெற்றுள்ளனர்.

அதிமுகவில் இருந்து விஜயிடம் செல்பவர்கள் அவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தத்து எடுத்துக்கொண்டார் என்பதற்காக போகமாட்டார்கள். அதிமுகவின் நடவடிக்கைகளை பார்த்து அதிருப்தி அடைந்தவர்கள் சீமான், விஜய், திமுகவுக்கு போக வாய்ப்பு உள்ளது. அதில் பெரும்பான்மையானோர் திமுகவுக்கு தான் செல்ல வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியையோ, ஓபிஎஸ்-யோ அவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசாக பார்க்க தயாராக இல்லை. காரணம் ஜெயலலிதாவின் துணிச்சல். ஜெயலலிதா அரசியலுக்கு வந்த புதிதில் அவருக்கு என்எஸ்ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசில் யார் இருந்தாலும் அவருக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும். அதற்கான பின்புலம் அவருக்கு இருந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பின்புலம் இல்லை. சில காரியங்களில் துணிச்சலாக செய்தார்.


