திமுக கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 73வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். மார்ச் 1, 2026 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான சமூகப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தலைவர் கலைஞர் மற்றும் அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து, இளமையிலேயே திராவிட இயக்கப் பணியில் ஈடுபட்ட தனது அரசியல் பயணத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார். கடமை உணர்வும் பணிவும் கொண்ட தொண்டராக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்தநாளையொட்டி படாடோப விளம்பரங்கள், ஆடம்பர பேனர்கள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உற்சாகம் எல்லை மீறாத வகையில் ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதற்குப் பதிலாக, சமூக நலச் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். ஏழை, எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றும், கட்சிக் கொடிகளைப் புதுப்பித்தல், கிளைக் கழகப் பெயர்ப் பலகைகளை சீரமைத்தல், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் இயங்கும் படிப்பகங்களுக்கு நூல்கள் வழங்குதல், மூத்த உறுப்பினர்களை கௌரவித்தல், இரத்த தான முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு இப்போதே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு தொடங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். “ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற கோஷம் மக்களிடையே ஒலிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஏழாவது முறையாக கழகம் ஆட்சிப் பொறுப்பேற்க தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆடம்பரத்தைத் தவிர்த்து, அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்வதே தமக்கு வழங்கப்படும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது – முதல்வர்


