சென்னை தாம்பரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மாணவி மற்றும் மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாம்பரம் கிழக்கு, ஐ.ஏ.எப் சாலை, ப்ரொபசர் காலனி அருகே நேற்று மாலை இந்த விபத்து நடைபெற்றது. கல்லூரி மாணவர் ஜனார்தனன் தனது இருசக்கர வாகனத்தில், பின்னால் மாணவி ஆண்ட்ரியாவை அமர வைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் திரும்பிய போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பயணித்த மாணவர் சஞ்சயுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஜனார்தனன் மற்றும் ஆண்ட்ரியா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மயக்க நிலையில் இருந்த ஆண்ட்ரியாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் காயமடைந்த ஜனார்தனன் மற்றும் சஞ்சயும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஜனார்தனன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பள்ளிகரனை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற பதபதப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பகுதி முக்கிய சாலை சந்திப்பாக இருப்பதால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் நிலையில், வேகத்தடைகள் இல்லாததே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
