என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி
கோவையில் சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோகுல் என்ற ரவுடி நீதிமன்ற பின்புறம் பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற சாலையிலேயே பட்டப்பகலில் ரௌடி கும்பலால் வெட்டி வீழ்த்தப்பட்டார். இந்த நிலையில் பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் சந்திப்பு மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வந்தனர். வழக்கின் விசாரணை தீவிர படுத்தப்பட்ட போது இந்த கொலை சம்பவம் இரு கேங் இடையே நடைபெறும் பழிவாங்கும் நடவடிக்கை என்பது தெரிய வந்தது.
இந்தநிலையில் கோகுலை வெட்டி கொன்றவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் கோகுலின் நண்பர்கள் தரப்பு திட்டமிட்டு இருப்பது போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் பதுங்கி இருந்த கோகுல் நண்பர்கள் தரப்பு பெங்களூரில் இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர்.
பின்னர் அவர்களை அங்கு சென்று கோகுலின் நண்பர்கள் தரப்பை கைது செய்ய முனைப்பு காட்டினர். அப்போது அவர்கள் பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருப்பது தெரிய வந்தது. சுஜி மோகன், பிரவீன் ராஜ், அமர்நாத், பிரசாந்த் நான்கு பேரும் ஒரு குடியிருப்பிலும், அஸ்வின், ராஜேஷ், பிரதீப் மற்றொரு குடியிருப்பிலும் தங்கி இருப்பதை கண்டுப்பிடித்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த ரவுடிகள் தப்பிக்க முயன்றனர். இதில் சிலர் நேரடியாக போலீசாரிடம் பிடிபட்ட நிலையில் சிலர் விரட்டி பிடிக்கப் பட்டனர். சுஜி மோகன், பிரவீன் ராஜ் தப்பி ஓட முயன்ற நிலையில் போலீசாரிடம் பிடிபட்டனர்… இந்த நிலையில் அமர்நாத் மற்றும் பிரசாந்த் இரண்டு நபர்களும் நான்கு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று தப்பி ஒட முயன்ற ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அஸ்வின், ராஜேஷ், பிரதீப் உள்ளிட்ட மூவரும் வேறு ஒரு குடியிருப்பில் இருந்த பொழுது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி அமர்நாத் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் எங்களை புடிக்க போறாங்க….. எங்களை சுத்திட்டாங்க…… நாங்க ஓடிட்டோம்….. என் கை கால்கள் நன்றாக இருக்கு … போலிஸ் எங்கள புடிக்க போறாங்க … என்ன பன்னுவாங்க ஏது பன்னுவாங்கன்னு தெரியல … இந்த வீடியோவ எல்லாருக்கும் அனுப்பி எல்லாத்தையும் காப்பாத்தனும் … என்று அந்த வீடியோவில் பதிவிட்டு இருக்கின்றார்.
மேலும், தனிப்படை போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய ரவுடி மரண பயத்தில் வெளியிட்ட வீடியோ தற்பொழுது வெளியாகி இருக்கின்றன. கோவையில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்த நிலையில், ரவுடிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கைதாகி இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.