தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறகு திமுக உடனான கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனையுடன் கூடிய ஆதரவு:

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளது. இதில் மிக முக்கியமான நிபந்தனையாக, “பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அல்லது அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் கோரக்கூடாது” என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு, நேற்று இரவு நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழு (PAC) கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆதரவு கடிதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதரவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தவெக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதனையொட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தவெக-வின் அரசியல் செயல்பாடுகள் மையமாக உள்ள பனையூர் அலுவலகத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ் கட்சியின் இந்த ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைக்கும் முயற்சியை வேகப்படுத்தியுள்ளது. இந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…
