தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் ‘சிறப்புப் பணி அலுவலராக’ (OSD) நியமிக்கப்பட்ட அவரது ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிரிவேலின் நியமன உத்தரவு, கடும் எதிர்ப்புகள் காரணமாக 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது முதல் சில முக்கிய நியமனங்களை மேற்கொண்டார். அதில், கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வந்த ராதன் பண்டிட் வெற்றிரிவேல், முதலமைச்சரின் அலுவலகத்தில் (CMO) அரசியல் ஒருங்கிணைப்புக்கான ‘சிறப்புப் பணி அலுவலராக’ நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
விஞ்ஞான ரீதியான நிர்வாகத்தை முன்னெடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது.

“அரசு நிர்வாகத்தில் ஜோதிடர்களின் தலையீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸின் சசிகாந்த் செந்தில், விசிக தலைவர் ரவிக்குமார் மற்றும் சிபிஎம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் இந்த நியமனத்திற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின. “பகுத்தறிவு பேசும் தமிழ் மண்ணில் ஜோதிடருக்கு அரசுப் பதவியா?” என சமூக வலைதளங்கள் கேள்வி எழுப்பினர்.
ஆட்சியைப் பிடித்த குறுகிய காலத்திலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுந்தது முதலமைச்சர் விஜய்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் மற்றும் மக்கள் கருத்தைக் கருத்தில் கொண்டு, ராதன் பண்டிட் வெற்றிரிவேலின் நியமன உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
“நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நியமனம் ரத்து செய்யப்படுகிறது” என அந்த அரசாணையில் சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ராதன் பண்டிட்?
ஈரோட்டைச் சேர்ந்த இவர், முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ஜோதிட ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அரசியல் வருகை, கட்சியின் பெயர் தேர்வு மற்றும் பதவியேற்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு இவரே நேரம் குறித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடி ரத்து நடவடிக்கை, “விஜய் தனது பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பைச் சமாளிக்கவும் எடுத்த ராஜதந்திர முடிவு” என கருதப்படுகிறது.
