தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜி-யாக அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி-யாக தர்மராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி சைபர் கிரைம் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காவல்துறை நிர்வாகத்தில் முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டு, உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 10 உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. உளவுத்துறை டிஜிபி முதல் எஸ்பி நிலை அதிகாரிகள் வரை இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.


முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, காவல்துறை நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று விரிவான இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நிலை மாற்றத்தின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு, ”வேலூர் சரக டிஐஜியாக இருந்த தர்ம ராஜன், முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த கல்யாண், மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை சரக டிஐஜியாக இருந்த சரவணன், உளவுத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்பி கராட் கருண் உத்தவராவ், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தென்காசி மாவட்ட எஸ்பி மயிவாகனன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன் ஆகியோர் உளவுத்துறை எஸ்பி (1) பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். கியூ பிரிவு எஸ்பி சண்முகம் மற்றும் சிபிசிஐடி எஸ்பி மாதவன் ஆகியோர் உளவுத்துறை எஸ்பி (2) ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழக காவல்துறை உதவி ஐஜி சிலம்பரசன் சிறப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதேவேளையில், உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி மாநில சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.” இந்த மாற்றங்கள் காவல்துறையின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய அலோசனை…
