முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய இலாகாக்கள் யாருக்கு என்பது குறித்த முழு விவரம். 
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், சில புதிய முகங்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷுக்கு இந்து அறநிலையத் துறை வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் சுற்றுலாத்துறையையும், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் போக்குவரத்துத்துறையையும் கவனிக்க உள்ளனர்.
கமலிக்கு கால்நடைத் துறை
அவிநாசி (தனி) தொகுதியைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ. கமலிக்கு கால்நடை பராமரிப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. 28 வயதில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அவர், இளம் வயது அமைச்சராகவும் கவனம் பெற்றுள்ளார். அதேபோல், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. விஜயலட்சுமிக்கு பால்வளத்துறை, கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. வினோத்துக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள்
காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார் வனத்துறையையும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. ராஜீவ் சுற்றுச்சூழல்துறையையும் கவனிக்க உள்ளனர். கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறையையும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜ் கூட்டுறவுத்துறையையும் பெற்றுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. மதன்ராஜாவுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நலன் முதல் AI துறை வரை…
ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி கைத்தறி, நெசவு மற்றும் ஜவுளித்துறையை கவனிக்க உள்ளார். ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை வழங்கப்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. குமாருக்கு AI மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையையும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் கவனிக்க உள்ளனர்.
முதலமைச்சரிடம் சென்ற வறுமை ஒழிப்பு துறை
அமைச்சர் ஆனந்திடம் இருந்த வறுமை ஒழிப்புத்துறை முதலமைச்சர் விஜயின் நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸுக்கு தொழிலாளர் நலத்துறை, தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. சரத்குமாருக்கு மனிதவளத்துறை வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசின் முதல் முழுமையான இலாகா ஒதுக்கீடு வெளியாகியுள்ள நிலையில், நிர்வாக திறன் மற்றும் பிராந்திய சமநிலை குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
