தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விதிகளின்படி, ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடிக்கான பலன் கிடைக்கும். குடும்ப அட்டை (Ration Card) அடிப்படையில் இந்த வரையறை மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தில் புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறுகிய கால பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் மற்றும் கூட்டுப் பொறுப்புக்குழு (JLG) கடன்கள் மட்டுமே தள்ளுபடி சலுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெற்ற கடன்களும் தள்ளுபடிக்குத் தகுதியற்றவை என கூறப்பட்டுள்ளது. இதனுடன், கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்த சலுகையை பெற முடியாது. விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பெறப்பட்ட நகைக்கடன்களும் தள்ளுபடியில் சேர்க்கப்பட மாட்டாது.
ஒரு விவசாயி ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்களை பெற்றிருந்தால், அவற்றில் ஒரு கடனுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல், ஒரே குடும்பத்தில் பலர் கடன் பெற்றிருந்தாலும், ஒருவரின் கடனுக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். மேலும், பயிர்க்கடன்களுக்காக ஏற்கனவே அரசு மானியம் பெற்றிருந்தால், அந்த மானியத் தொகையை கழித்த பிறகு எஞ்சியுள்ள தொகைக்கு மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
