தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, அரசு சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் உலக “குருதி கொடையாளர் தினம்” முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார். இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாரதி மோகன், அரசுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
7,000 யூனிட்டைக் கடந்த இரத்த தானம்
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன், கரூர் மாவட்டத்தில் நிலவும் இரத்த தான விழிப்புணர்வு குறித்துப் பெருமிதத்துடன் பேசினார். “கரூர் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 7,286 யூனிட் இரத்தம், அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று புள்ளிவிவரங்களுடன் அவர் குறிப்பிட்டார்.


ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் விழா
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய அடுத்தகட்ட அரசு திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், “தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதல்வர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்க உள்ளார்” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா மேடை அமைப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பணிகளை மாவட்ட நிர்வாகம் தற்பொழுது முடுக்கிவிட்டுள்ளது.
