திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
![]()

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வழக்கின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் ஆவணங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் என்.ஆர். இளங்கோ கூறியதாவது, ”திமுக மீது திட்டமிட்டுக் களங்கம் விளைவிக்கும் வகையில், நேற்று வரை அரசை கவிழ்க்கும் எண்ணத்தோடு செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், சபாநாயகருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வருவது என்பது, எந்த வகையிலும் அரசை கவிழ்க்கும் குற்றச்சாட்டின் கீழ் வராது என்பதை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்தோம். மேலும், இவ்வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவர், தனது வாக்குமூலத்திலோ அல்லது வேறு எங்குமே அரசை கவிழ்ப்பதற்கான திட்டம் தீட்டியதாகக் கூறவே இல்லை.”
அரசியல் உள்நோக்கம்
இந்த வழக்கில் அரசை கவிழ்ப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வாதிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதன் விளைவாகத் தற்போது நீதிமன்ற ஆவணங்களில் இருந்து ‘அரசை கவிழ்ப்பதற்கான திட்டம்’ என்கிற குற்றச்சாட்டு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், “திமுக மீதும், செந்தில் பாலாஜி மீதும் எப்படியாவது பழிசுமத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடுதான் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம்” என்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ திட்டவட்டமாகக் கூறினார்.
