கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்குத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் இன்று அதிதீவிரக் கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 3 வட மாவட்டங்களிலேயே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு டூ ரெட் அலர்ட்:
முன்னதாக, இந்த மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற்பகலுக்கு மேல் மழையின் வேகம் எதிர்பார்த்ததை விடக் கடுமையாக அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது ‘ரெட் அலர்ட்’ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அதிதீவிரக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தொடர் மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
