தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை எஸ்டிபிஐ (SDPI) கட்சி மனதார வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணவும், மக்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாகச் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு:
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை மட்டுமன்றி, மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பொது இடங்களில் எருது, காளை உள்ளிட்ட மாடுகள் மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்கினங்களைப் பலியிடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் சட்ட ரீதியான நகர்வு மூலம் பெறப்பட்ட இந்த உத்தரவை எஸ்டிபிஐ கட்சி மனதார வரவேற்கிறது.
நிரந்தரத் தீர்வுக்குச் சட்டத்திருத்தம் அவசியம்:
இந்த விவகாரத்தில் தற்போது கிடைத்துள்ளது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதால், வழக்கில் முழுமையான வெற்றி பெறவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தடைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு சில முக்கியமான சட்டத்திருத்த நடவடிக்கைகளில் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமை மற்றும் மக்களின் பாரம்பரிய உணவு உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு மக்கள் அரசின் முதன்மைக் கடமையாகும். எனவே, தமிழ்நாடு அரசு பின்வரும் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1958 (Tamil Nadu Animals Preservation Act, 1958) தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள், 2023 (Tamil Nadu Urban Local Bodies Act, 1998 and Rules, 2023) தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 (Tamil Nadu Public Health Act, 1939) இச்சட்டங்களில் மதச் சடங்குகள், பண்டிகைகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளுக்கான விலங்குப் பலிக்கு முறையான சட்டப்பூர்வ விலக்கை (Exemption) உறுதி செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
அனைத்துத் தரப்பு மக்களின் உரிமையைப் பாதுகாக்க கோரிக்கை:
ஒன்றிய அரசின் ‘விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்’ (Prevention of Cruelty to Animals Act) விதிகளை மீறாத வகையிலும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும்.
இது இஸ்லாமியர்களின் புனித குர்பானி திருநாள் மற்றும் இந்து உள்ளிட்ட மற்ற சமூக மக்களின் பாரம்பரிய கிராமப்புறக் கோவில் கொடை விழாக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சமத்துவ நடவடிக்கையாக அமையும். எனவே, மக்களின் உணர்வுகளோடும், வழிபாட்டு முறைகளோடும் கலந்த இந்த உணர்வுப்பூர்வமான விவகாரத்தில், தமிழ்நாடு அரசு எதிர்கால நலன் கருதி, தேவையான சட்டத்திருத்தங்களையும், புதிய வழிகாட்டுதல்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் மத மற்றும் உணவு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
