மதுபோதையில் அதிவேகமாகக் காரை இயக்கி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்துப் பிரபல தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.


வழகின் பின்னணி:
கடந்த 2013-ஆம் ஆண்டு, சென்னை எழும்பூர் பகுதியில் தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் மதுபோதையில் சொகுசுக் காரை ஓட்டிச் சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கடந்த ஜூலை 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
அமர்வு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஷாஜி புருஷோத்தமன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சீரிய வழக்கின் அடுத்தகட்ட விசாரணை குறிப்பிட்ட தேதியில் நடைபெறவுள்ளது.
