சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அம்மா உணவகப் பெண் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மா உணவகத்தில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். “நாங்கள் சொகுசு காரோ அல்லது பெட்ரோலோ கேட்கவில்லை; எங்கள் உழைப்புக்கான நியாயமான ஊதிய உயர்வை மட்டுமே கேட்கிறோம்” என்று அவர்கள் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தனர்.

கொரோனா கால உழைப்பு:
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் எந்த அளவிற்கு ஆபத்தை உணர்ந்து பணியாற்றினார்களோ, அதே போன்று நாங்களும் அம்மா உணவகங்களில் தொடர்ந்து சேவையாற்றினோம். ஆனால், மிகக் குறைந்த பணியாளர்களுடன், மிகக் குறைந்த ஊதியத்தில்தான் இன்றும் பணியாற்றி வருகிறோம். அரசு உடனடியாக தலையிட்டு எங்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.800-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
துயரக் குரல் மற்றும் வாதங்கள்:
பெரும்பாலான ஊழியர்கள் கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். தங்களின் குடும்ப வறுமையைப் போக்க இத்தொழிலை நம்பி இருப்பதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
அரசின் கூற்றுக்கு மறுப்பு:
இதனிடையே, “தவெக அரசு பொறுப்பேற்ற பின் அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஊழியர்கள், “அவையெல்லாம் வெறும் விளம்பரத்துக்காகச் சொல்லப்படுபவைதான்; ரீல்ஸ் (Reels) போடுவதற்காகக் கூறப்படுகின்றன. உண்மையில் அங்கு எதையுமே செய்யவில்லை. அம்மா உணவக வளாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் கூட இதுவரை சரி செய்யப்படவில்லை” எனத் கடுமையாகக் குற்றஞ்சாட்டினர்.
நீண்ட காலமாகத் தாங்கள் படும் அவலங்களுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.
கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் பேச்சு.!
