புதுச்சேரியில் சாலையில் பல ஆண்டுகளாக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு இனிமேல் எந்த அவகாசமும் வழங்கப்படாது என்றும், அவை முன் அறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அதிரடியாக அறிவித்துள்ளார்.
சாலைகளை ஆக்கிரமிக்கும் அனாதை வாகனங்கள் புதுச்சேரியின் முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் ஏராளமான கார், லாரி, டாடா ஏஸ் உள்ளிட்ட வாகனங்கள் பல ஆண்டுகளாக நிற்கின்றன. இவை யாருக்குச் சொந்தமானவை என்று தெரியாமல் கேட்பாரற்றுக் கிடப்பதோடு, சாலைகளை ஆக்கிரமித்துப் கடும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வந்தனர்.
கிரேன் மூலம் அதிரடி பறிமுதல் – இதையடுத்து களத்தில் இறங்கிய உழவர்கரை நகராட்சி, முதற்கட்டமாக அனாதையாக நின்ற வாகனங்கள் மீது எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது. இருப்பினும், பலர் தங்கள் வாகனங்களை அகற்றவில்லை. இதனைத் தொடர்ந்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் இடையூறாக நின்ற கார், ஆம்புலன்ஸ், டிராக்டர் என மொத்தம் 9 வாகனங்களை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
ஆணையர் அருண் அய்யாவு எச்சரிக்கை – இது தொடர்பாக நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு கூறுகையில், “ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. இனிமேல் எந்தக் கால அவகாசமும் தரப்பட மாட்டாது.
உரிமையாளர்கள் உடனடியாகத் தங்கள் வாகனங்களை அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றிப் போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும்” என்று எச்சரித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய அபராதத் தொகையைச் செலுத்தி, “இனி சாலையில் வாகனங்களை நிறுத்த மாட்டேன்” என்று உறுதிமொழி கடிதம் கொடுத்துவிட்டுத் தங்கள் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நகராட்சி நிர்வாகம் தெரிவிடைத்துள்ளது.
தெலுங்கானா சட்டமன்றத்தில் சோகம்: அதிகாரிக்கு அமைச்சர் முதலுதவி அளித்தும் பலனின்றி மாரடைப்பால் மரணம்!
