இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ‘வேட்டுவம்’ குறித்த அறிவிப்பும் அதன் அறிமுக வீடியோவும் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் சூர்யாவுடன் இணைய உள்ள படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மனம் திறந்து பல சுவாரஸ்ியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஸ்டார் பட்டாளத்துடன் களமிறங்கும் ‘வேட்டுவம்’
பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வேட்டுவம்’. இப்படத்தில் ஆர்யா, வி.ஆர். தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதும் பேசப்படாத பாரம்பரியத் தற்காப்புக் கலையான மால்கம்பு (Mallakhamb) பின்னணியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இப்படத்திற்குத் திறமைமிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சூர்யா படம் தள்ளிப்போனது ஏன்? – மனம் திறந்த பா.ரஞ்சித்
இப்படத்தின் அறிமுக விழாவின் போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் படக்குழுவினர் பதிலளித்தனர். அப்போது இயக்குநர் பா.ரஞ்சித்திடம், நடிகர் சூர்யாவுடன் இணைந்து நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது: “சூர்யா சார் உடன் இணைவதற்கான பணிகள் முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டன. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார் எப்படியாவது அந்தப் படத்தை விரைவில் ஆரம்பித்து விட வேண்டும் எனத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். ‘தங்கலான்’ படம் முடிந்தவுடனே சூர்யா உடனான படத்தை தொடங்குவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், என் மனதுக்குள் ‘வேட்டுவம்’ கதையைச் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வம் ஓடிக்கொண்டே இருந்தது. அதனால் ஞானவேல் சாரிடம், ‘வேட்டுவம்’ படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறினேன். அதேபோல் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தையும் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கோரிக்கை வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஞானவேல் சார், இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு வருமாறு என்னை அனுமதித்துள்ளார். எனவே, இந்த இரண்டு படங்களின் பணிகளை முடித்த பிறகு மீண்டும் ஞானவேல் சாரிடம் செல்வேன்; அப்போது அவர் யாரைக் கை காட்டுகிறாரோ, அவரை வைத்து அந்தப் படத்தை இயக்குவேன்” என்றார்.
