விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி F12 ராக்கெட்
என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. F12 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
1999 ஆம் ஆண்டு இந்தியாவில் செலுத்தப்பட்ட முதல் வழிகாட்டி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், என்விஎஸ்-01 எனப்படும் இரண்டாம் தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் எஏவப்பட்டது. முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6-வது ராக்கெட் இதுவாகும்.

என்.வி.எஸ்.01 செயற்கைக்கோள் 36,000 கி.மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் 3 மணிநேரத்தில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2,232 கிலோ எடைக்கொண்ட இந்த செயற்கைக்கோளில் 2 சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால், அதன்மூலம் 2.4 கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த செயற்கைக்கோள் மூலம் கடல்சார் இருப்பிடம், பேரிடர் மேலாண்மை, அலைப்பேசிகளுக்கான வழிகாட்டி வசதிகளை பெற முடியும். என்.வி.எஸ் 01 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகளாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சொந்த வழிகாட்டி அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் கைக்கோர்த்துள்ளது.