டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம்
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வோர் மீது அபராதம் விதித்து, பணி மாறுதல் செய்யப்படுகிறது. மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட பணியாளர் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது. மதுபானக் கடையில் வியாபாரம் குறையவேண்டும் என நினைக்கிறோம்.டாஸ்மாக் குறித்து எதிர்க்கட்சி ஏதாவது சொல்வது சாதாரண விஷயம், தவறுகள் நடக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். அதனை மீறி தவறு நடைபெற்றாக தகவல் வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.