திமுக எம்பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு
நெல்லையில் மத போதகரை சரமாரியாக தாக்கிய விவகாரத்தில் திமுக எம்பி ஞான திரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஞானதிரவியம் இருந்து வருகிறார். இந்த நிலையில் எம்பி ஞானதிரவியம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி கழக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் – கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமைக் கழகத்திற்கு புகார் வரப்பெற்றுள்ளதால், அவரது இச்செயல் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த அவரது விளக்கத்தினையும் – செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டுமெனவும், அப்படி தெரிவிக்க தவறும் பட்சத்தில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தொடர்புடையதாக ஞானதிரவியல் உட்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
