நில அபகரிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை
நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, சைதாப்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அபகரித்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் பெயருக்கு பதிவுச் செய்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003- ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதில் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மற்ற ஏழு பேர் மீதும் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 90- க்கும் மேற்பட்ட சாட்சிகள், 100- க்கும் மேற்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயவேல், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.


