அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7:00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த சோதனையில் முதற்கட்டமாக பாரன்சிக் ஆடிட் மூலம் தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் ஆவணங்கள் எலக்ட்ரானிக் உபகரணங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான சட்டவிரோத பணப்பரிவினை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வங்கி பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக 28 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக கூறப்படும் காலகட்டத்தில் உள்ள வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில் தொடர்பான சந்தேகங்களை பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோர் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களை, சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி அதிகாரியை நேரடியாக அழைத்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பெரும் அளவிலான பண பரிவர்த்தனை நிகழும் போது அந்த பணத்திற்கான மூலதனம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும், மற்றும் யாருக்கெல்லாம் பணப்பரிவினை செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.