கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன், சக்திவேல் ஆகிய நான்கு பேரும் கோடியக்கரையில் இருந்து கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கடலுக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர்.
கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இவர்களது வலை காணாமல் போனதால் அதைத் தேடிக் கொண்டு சென்றபோது இலங்கை எல்லைப் பகுதியில் நுழைந்ததாக இலங்கை கடற்பறையினர் இந்த நான்கு பேரையும் கைது செய்து, காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். இந்த நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவ குடும்பத்தினரும் மீனவ சங்கத்தினரும் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
