ஜனவரி முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 470 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.17.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத
21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் பொங்கலுக்குள் தொடங்கப்படும். இலவச அரிசிக்கான பணம், சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,400, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1,200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவை வழங்கப்படும். உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை இன்று முதல் அமலுக்குவருகிறது. பால் கொள்முதல் விலை ரூ.34ல் இருந்து ரூ.37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து பெறுவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மாநில அரசு எங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை” எனக் கூறினார்.
