தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகிவரும் நடப்பு குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12ம்தேதி திறக்கப்பட்டதை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்துறை அறிவுரையின்படி சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்க்கு மேல் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேரடி விதைப்பாகவும், நடவு முறையிலும் இத்தகைய சாகுபடி பணிகளை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொண்டனர். ஆனால் பாசன ஆறு, வாய்க்கால்களில் போதுமான அளவு தண்ணீர் விடுவிக்கப்படாததால் சுமார் 70 சதவீத பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி காய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகினர். இதுகுறித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு போதுமான அளவு தண்ணீரை விடுவிக்க தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிக்காத நிலையாலும், தமிழகத்தின் சட்டபூர்வமான உரிமையினை நிலைநாட்டிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையாலும் நடப்பு குறுவை சாகுபடி மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இத்தகைய சூழலில் விவசாயிகள் தங்களது பயிர் பாதிப்புக்கு அரசே பொறுப்பு எனவும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30000 நிவாரணம் கேட்டும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்த வந்த வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான வேளாண் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் சாருஸ்ரீ , வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலம், ஓகை பேரையூர், ஆதிச்சபுரம் குறிஞ்சிமூலை, கோசங்கநல்லூர் , திருத்துறைப்பூண்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகிவரும் குறுவை பயிர்களின் நிலைக்குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரி தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எழுத்துகொண்டார் . அப்போது அதிகாரியிடம் பேசிய விவசாயிகள் அனத்து பகுதிகளையும் முறையாக தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் விடவேண்டும் . தற்போது பயிரிட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.