சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாளர் நலவாழ்வுக்கான யோகா மற்றும் தியான பயிற்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.


அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவ பணியாளர் நலவாழ்வுக்கான யோகா மற்றும் தியான பயிற்சி மிகவும் தேவையான ஒன்று. நல்ல மனநிலை உடல் நலம் இருந்தால் மட்டுமே நல்ல நிர்வாகம் செய்ய முடியும். 1977 ஆம் ஆண்டு தொடங்கி 1991 இல் மாதிரி மருத்துவமனையாக மாறி இன்று மிகச்சிறந்த மருத்துவமனையாக இஎஸ்ஐ இருக்கிறது. மற்ற இஎஸ்ஐ கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக சென்னை இஎஸ்ஐ பணியாளர் நலவாழ்வுக்கான யோகா மற்றும் தியான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 2006ல் சென்னையில் மகேப்பேறு பெண்களுக்கு யோகா பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று இந்தியா முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. யோகா பயிற்றுவிப்பதில் இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. 2023 ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 8760 மணி நேரம் உள்ளது. இதில் 500 மணி நேரத்தை நடக்க ஓட செலவிடப்போகிறேன். வருகிற டிசம்பர் 31 சான்றிதழ் போன்ற ஆதரத்தோடு அறிவிப்பேன். இன்று பார்த்தசாரதி கோவிலில் தி.இந்து புகைப்படக் கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் மிக மிக வருத்தமாக இருக்கிறது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் கணவர் செளந்தரராஜன், “2023 ஆம் ஆண்டில் 500 மணி நேரத்தை உடல் நலத்திற்காக ஓடவும் நடக்கவும் செலவிடப் போகிறேன் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்திருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய செய்தி. நம் அனைவருக்கும் மிகப்பெரிய ரோல் மாடலாக இருக்கிறார் அமைச்சர் மா சுப்ரமணியன்” என்றார்.
