அதிமுக சின்னம், பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் வழக்கு
அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, தடை கோரிய இபிஎஸ் மனுவுக்கு பதிலளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண் ஆஜராகி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விவரங்களை பட்டியலிட்டார். உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி வருவதாகவும், கட்சி உறுப்பினர் என கூறி வருவதாகவும், கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வாதிடப்பட்டார்.
இதுதொடர்பாக பிரதான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும்,இபிஎஸ் மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.