பருப்பு வகைகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். குறிப்பாக துவரம் பருப்பினை உட்கொண்டால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். புரதச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், போலிக் ஆசிட் என பல வகையான ஊட்டச்சத்துக்கள் துவரம் பருப்பில் அடங்கியுள்ளன. தற்போது துவரம் பருப்பில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 4 கப்
(கேரட், பீன்ஸ், உருளை) – ஒரு கப்
ரொட்டி துண்டுகள் – 5
துருவிய பாலாடைக்கட்டி – 4 மேசைக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
செய்முறை:
1. முதலில் வாணலியில் சிறிதளவு நெய்யினை ஊற்ற வேண்டும்.ரொட்டித் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நெய் காய்ந்ததும், ரொட்டி துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. பருப்பு கெட்டியாக இருக்கக் கூடாது. அப்படி கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
4. அதன் பின் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை போட்டு வேகவிடவும்.
5. பருப்புடன் காய்கறிகளும் நன்கு வெந்த பிறகு துருவிய பாலாடை கட்டிகளை சேர்க்கவும்.
6. அதன் பிறகு நெய்யில் வறுத்த ரொட்டி துண்டுகளை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். சுவையான பருப்பு சூப் ரெடி.
பருப்பு சூப்பினை பரிமாறும் முன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.