பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 1979இல் அகல்விளக்கு எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தன் கடின உழைப்பால் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக உருவெடுத்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியான கருத்துக்களை தன் படங்களில் தொடர்ந்து கூறி வந்தார். சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சேதுபதி ஐபிஎஸ் என ஆக்சன் படங்களானாலும், வானத்தைப்போல, ரமணா, சின்ன கவுண்டர், சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா போன்ற எமோஷனல் கதாபாத்திரங்களாக இருந்தாலும் அவற்றில் தனி முத்திரை பதித்தவர். இவ்வாறு கம்பீரமாக திரையில் தோற்றமளித்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் தன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி மார்பு சளி, இருமல் போன்ற பிரச்சனையால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்காக மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால் நேற்று (நவம்பர் 29) அன்று வெளியான அறிக்கை ரசிகர்களின் நம்பிக்கையை சற்று வலுவிழக்க செய்தது. மியாட் மருத்துவமனை நிர்வாகம், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்ற அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து ICU -வில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Get well soon dear @iVijayakant sir … my sincere prayers ❤️💫✨
— G.V.Prakash Kumar (@gvprakash) November 29, 2023

இந்த தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்களும், திரை உலக பிரபலங்களும் விஜயகாந்துக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் ஜீவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ” விஜயகாந்த் சார் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகரும் இயக்குனருமான அமீர், “திரைத்துறையில் நான் கண்ட மனிதர்களை மிகவும் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நலம் சீராக இல்லை என்ற தகவலை கேட்டதும், நான் அதிர்ச்சி அடைந்தேன். விரைவில் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.