யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கன்னட திரைப்படம் கேஜிஎப் சேப்டர் 1. இப்படம் வெளியான போது கர்நாடகா தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் படம் வெளிவந்த பிறகு படத்திற்கு கிடைத்த வரவேற்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அந்தளவுக்கு மாபெரும் ஹிட் அடித்து அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் வேற லெவலில் ஏற்றி விட்டது இப்படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான கேஜிஎப் சேப்டர் 2, ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என திரும்பிய பக்கமெல்லாம் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான். தன் தாய்க்கு அளித்த வாக்கின்படி மிகப் பெரிய பணக்காரனாவதை லட்சியமாகக் கொண்ட சிறுவன் இந்தியாவே தேடிக் கொண்டிருக்கும் கேங்ஸ்டராக மாறி தன் லட்சியத்தை எவ்வாறு அடைந்தான் என்பதுதான் கேஜிஎஃப் 1,2 படங்களின் ஒரு வரி கதை. படங்களில் சில மாஸ் காட்சிகள் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு படம் முழுக்கவே மாஸ் இருந்ததென்றால் அது தான் கேஜிஎப். எனவே இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் , பிரபாஸ் நடிப்பில் இயக்கி வரும் சலார் படத்திற்கு இமாலய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. பாகுபலி படத்தின் மூலம் ஆயிரம் கோடியை சாதித்த கதாநாயகன் பிரபாஸும், கே ஜி எஃப் படங்களின் மூலம் ஆயிரம் கோடியை தொட்ட இயக்குனரான பிரசாந்த் நீலும் இணைந்ததே இப்படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவ காரணம். இந்த சலார் படமும் ஒரு ஆக்சன் படமாக தான் உருவாகியுள்ளது. படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை பார்க்கும் பொழுது கேஜிஎப் படத்தில் பயன்படுத்தப்பட்ட அதே கலர் டோன்கள் இடம்பெற்றிருந்ததால் இதனை பிரசாந்த் நீல்-ன் யுனிவர்ஸில் கேஜிஎப் உடன் தொடர்புடையதாக இருக்கும் கதை எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் இதனை தெளிவுபடுத்தும் விதமாக பிரசாந்த் நீல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். கே ஜி எஃப் மற்றும் சலார் இரண்டும் வெவ்வேறான கதைகள்.
ரசிகர்கள் கே ஜி எஃப் போன்ற படம் என்ற எதிர்பார்ப்பில் வர வேண்டாம். சலார் தனிப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் எமோஷன்களையும் கொண்டுள்ளது. சலார் படத்தின் கதை மிக நீளமானது என்பதால் கதையை முழுவதுமாக நிறைவு செய்ய இரண்டு பாகங்களாக படம் உருவாகியுள்ளது. இரண்டு படங்களும் சேர்த்து 6 மணி நேரம் நீளம் கொண்டிருக்கும். சலார் படத்தின் கதையானது இரண்டு நெருங்கிய நண்பர்கள் எவ்வாறு மிகப்பெரிய எதிரிகளாக மாறுகின்றனர் என்பதைப் பற்றியது எனவும் இந்த அப்டேட்டில் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் டிசம்பர் 22 அன்று வெளியாக உள்ள சலார் திரைப்படமானது கேஜிஎஃப் யுனிவர்ஸ்- ல் இணையுமா அல்லது தனி படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படத்தை ஹோம்பலே ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.