சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நிமோனியா காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணி அளவில் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்தின் உடல் அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 6 மணி முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேமுதிக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு வழிநெடுக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் தற்போது தீவு திடலில் வைக்கப்பட்டிருக்கும்
விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த வண்ணம் உள்ளனர். கேப்டன் கேப்டன் என கதறி அழுது கொண்டே விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மதியம் 1 மணிக்கு தீவுத்திடலில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தை அடையும். பின் அங்கு 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது என தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -


