நம் மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை பறிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை வரும் நாடாளுமன்ற தேர்தலில் முற்றாக நிராகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் – தேசிய கல்விக் கொள்கை என நாம் நிராகரிக்கும் அநீதிகளை திணித்து, நம் மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை பறிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை வரும் நாடாளுமன்ற தேர்தலில் முற்றாக நிராகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதனை வலியுறுத்தி திமுக மாணவர் அணி ஒருங்கிணைப்பில் 16 மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பான “யுனைடெட் ஸ்டூடன்ட்ஸ் ஆஃப் இந்தியா” சார்பில் நடைபெற்ற “சென்னை பேரணி”யை கழக திமுக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பேரணியில் பங்கேற்றதுடன், நம் கழகம் தொடங்கப்பட்ட ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணியை நிறைவு செய்து வைத்தோம். கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழியில், கல்வி உரிமை காத்திட என்றென்றும் முன்னணியில் நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.