சென்னையை அடுத்த பூந்தமல்லியில், திரைப்பட நகரம் அமைக்க, அரசு அனுமதி அளித்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் அமைய உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் படங்களின் படப்பிடிப்பிற்காக தளங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழகத்தில் இல்லாத காரணத்தால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகின்றன. அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போகும் நிலை உருவாகிறது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனை கட்டுபடுத்தவும், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், தமிழக முதல்வரிடம் சென்னையில் ஒரு சினிமா நகரம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே 150 ஏக்கரில் புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள்,500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளது. அதற்கு தமிழ் திரையுலகம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.