சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் பணியாற்றும் தனது தந்தையைக் காண சென்ற 5 வயது சிறுமி இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர்கள் சங்கர் – வாணி தம்பதி. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லே சாலையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஹரிணி ஸ்ரீ என்கிற 5 வயது மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
அவ்வப்போது சங்கர் பணியாற்றி வரும் கடைக்கு அவரது மனைவி வாணி மற்றும் மகள் ஹரிணி சென்று வருவது வழக்கம். அதேபோல நேற்று இரவு மகளுடன் வாணி கணவரை பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது கட்டிடத்தின் வாயிலில் உள்ள 15 அடி நீளம் நான்கு அடி உயரம் கொண்ட இரும்பு கேட் அருகே, அங்கிருந்த காவலாளியுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

சங்கரும், வானியும் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு சிறுமியயை அழைத்துள்ளனர். அதற்குள் அங்கு பணியாற்றிய காவலாளி கேட்டை மூட முயற்சித்துள்ளார். பக்கவாட்டில் திறக்கும் வசதிகொண்ட இரும்பு கேட் திடீரென சிறுமி மீது விழுந்தது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை தந்தை சங்கர் தாய் வாணி இருவரும் ஆட்டோ மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, மேலும் இரும்பு கேட் எவ்வாறு விழுந்தது என நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கேட்டை மூடிய காவலாளி சம்பத் மற்றும் கடையின் மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த நிலையிலும் கடையின் உரிமையாளர் மற்றும் கட்டிட உரிமையாளர் நேரில் வந்த பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.


