“வடை புளிப்பாக இருக்கிறது” என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வடைக்கடையில் தகராறு:
சென்னை பெரம்பூர், ரமணா நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் உஷா (58). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள வடைக்கடையில் வடை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அப்போது வடை புளிப்பாக இருந்ததால், “பழைய மாவில் வடை சுடாதீர்கள், வடை புளிக்கிறது” என்று கடையினரிடம் கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் மகன் ராமன் (30), உஷாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கியுள்ளார். மேலும், கீழே கிடந்த கல்லை எடுத்து அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
போலீசார் அதிரடி கைது:
இத்தாக்குதலில் காயமடைந்த உஷா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில் செம்பியம் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TN Prohibition of Harassment of Woman Act) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராமனை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட ராமன் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
