டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான
தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த தாமதம் கண்டிக்கத்தக்கது. 2021 அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, 09.01.2022 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுகளின் முடிவுகள் 22.03.2022 அன்று வெளியிடப்பட்டன. கடந்த திசம்பர் 5-ஆம் தேதி மொத்தமுள்ள 195 புள்ளியியல் சார்பு பணிகளுக்கு 1:5 என்ற விகிதத்தில் பணி நாடுனர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த தாமதம் கண்டிக்கத்தக்கது!(1/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 11, 2023
கலந்தாய்வில் தகுதியான 195 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதன்பிறகு இரு மாதங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த தேவையற்ற தாமதம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை தேவை. நியமன ஆணை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் ஐயங்களையே ஏற்படுத்தும். அதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது. எனவே, புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு உடனடியாக நியமன ஆணை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
