spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்103 - குடிசெயல் வகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

103 – குடிசெயல் வகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

103 - குடிசெயல் வகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1021. கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்

கலைஞர் குறல் விளக்கம்உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

we-r-hiring

1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
          நீள்வினையான் நீளும் குடி

கலைஞர் குறல் விளக்கம்ஆழ்ந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
          மடிதற்றுத் தான்முந் துறும்

கலைஞர் குறல் விளக்கம்தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

1024. சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
          தாழா துஞற்று பவர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.

1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
          சுற்றமாச் சுற்றும் உலகு

கலைஞர் குறல் விளக்கம்குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

1026. நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
          இல்லாண்மை ஆக்கிக் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர். தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.

1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
          ஆற்றுவார் மேற்றே பொறை

கலைஞர் குறல் விளக்கம்போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.

1028. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
          மானங் கருதக் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைந்துவிடும்.

1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
          குற்ற மறைப்பான் உடம்பு

கலைஞர் குறல் விளக்கம்தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன். துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
          நல்லாள் இலாத குடி

கலைஞர் குறல் விளக்கம்வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம்,வென்று வீழ்த்திவிடும்.

MUST READ