Homeசெய்திகள்கட்டுரைகுழந்தைகளின் சுதந்திரம் - என்.கே. மூர்த்தி

குழந்தைகளின் சுதந்திரம் – என்.கே. மூர்த்தி

-

- Advertisement -

குழந்தைகளின் சுதந்திரம் – என்.கே. மூர்த்தியின் விளக்கம்

அன்புள்ள அப்பா அவர்களுக்கு உங்கள் மகள் வணக்கத்துடன் எழுதும் கடிதம்…

குழந்தைகளின் சுதந்திரம் - என்.கே. மூர்த்தி

என் மகனுக்கு தற்போது மூன்று வயது நிறைவடைந்து நான்காவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறான். அவனுடைய எதிர்காலம் குறித்து நிறைய கனவுகளும் கற்பனைகளும் எனக்குள் வளர்த்து வருகிறேன். எவ்வளவு உழைப்பை கொடுத்தாவது அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர ஆசைப்படுகிறேன்.

எனக்கு நீங்கள் செய்யாததை, உங்களால் செய்ய முடியாததை நான் என் மகனுக்கு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோன்று நான் கல்லூரி படிப்பு படித்து முடித்ததும் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் கனவு, ஆசை, லட்சியம் என அனைத்தையும் திருமணம் எனும் பந்ததிற்குள் கட்டி போட்டு விட்டீர்கள்

நான் சாதிக்க வேண்டும் என்று நினைத்து, செய்ய முடியாமல் போனதை என் மகன் வாயிலாக சாதித்து காட்ட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறேன்.

குழந்தைகளின் சுதந்திரம் - என்.கே. மூர்த்தி

அவனுடைய எதிர்கால கல்வி செலவிற்கு தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி சேமிப்பிலும் இறங்கி விட்டேன். இந்த நிலையில் அவனுக்கு எப்படிப்பட்ட கல்வி வேண்டும் என்பதிலும் அவனுடைய வளர்ப்பிலும் உங்களுடைய ஆலோசனையும், வழிகாட்டுதலும் அவசியமானது என்று கருதுகிறேன்.

உங்கள் பேரன் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்
ரம்யா

அன்பு மகளே!
உன் பிள்ளை மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருப்பதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

குழந்தைகளின் சுதந்திரம் - என்.கே. மூர்த்தி

அன்பு மகளே! நீ கவனமாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாய கட்டமைப்பில் நாம் எல்லோரும் கதாநாயகனாக மாறுவதற்கு முயற்சி செய்கிறோம். காலப்போக்கில் கதாநாயகர்களுக்கு கட்டவுட் வைப்பவர்களாக மாறி விடுகிறோம்.

ஆரம்பத்தில் மைதானத்தில் இறங்கி விளையாடுவதற்கு தான் முயற்சியை தொடங்குகிறோம், அதற்காக பயிற்சியும் எடுக்கிறோம், ஆனால் ஒரு கட்டத்தில் பயிற்சியை கைவிட்டுவிட்டு விளையாடுபவர்களை வேடிக்கை பார்த்து கைதட்டி மகிழும் கூட்டத்தில் சேர்ந்து விடுகிறோம். விளையாடுவதை விட வேடிக்கை பார்ப்பது சுலபமாக இருக்கிறது.

நமது மனம் எது சுலபமானதோ அதை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைந்து விடுகிறது. நமக்கு இலக்கு என்பது இல்லை. அப்படியே இலக்கு இருந்தாலும் அந்த இலக்கை அடைய வைராக்கியம் இருப்பதில்லை. மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்றால் தியாகங்களுக்கு தயாராக வேண்டும். தியாகத்திற்கு தயாராகாத லட்சம் பேர்களில் நீயும் ஒருவர்.

நமக்கு எழுதுவதை விட படிப்பது சுலபம், கிரிக்கெட் விளையாடும் 11 வீரர்களில் ஒருவராக இருப்பதைவிட அந்த வீரர்களை வேடிக்கை பார்த்து, கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சி அடைவது சுலபமாக இருக்கிறது. ஒரு திரைப்படத்தை இயக்குவது, நடிப்பது, அதில் ஒருவராக பங்கேற்பதை விட கதாநாயகர்களுக்கு கட்டவுட் வைத்து அவர்களின் பெருமையை பேசி மகிழ்ச்சி அடைவதை பெருமையாக கருதுகிறோம்.

கடின உழைப்பு இல்லாமல் எது எது சுலபமாக இருக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்கு பழகிக் கொள்கிறோம்.

நம்மால் செய்ய முடியாததை, சாதிக்க முடியாததை நமது பிள்ளைகள் மூலமாக அடைந்து விட அடுத்த முயற்சியில் இறங்கி  விடுகிறோம். இதைத்தான் நான் செய்தேன், இப்போது நீயும் செய்ய ஆசைப்படுகிறாய் என்று நினைக்கிறேன். எனவே நாம் தொடர்ந்து வாழையடி வாழையாக பார்வையாளராகவே இருந்து வருகிறோம் என்பது மட்டும் உண்மை.

இப்பொழுது உன் பிள்ளையின் எதிர்காலம் குறித்து நீ முயற்சி எடுப்பதை நினைத்து பெருமைப் படுகிறேன்.

 

இப்பொழுது உன் பிள்ளையின் எதிர்காலம் குறித்து நீ முயற்சி எடுப்பதை நினைத்து பெருமைப் படுகிறேன். எப்பொழுது போட்டியில் பங்கேற்க போகிறோம்? கை தட்டி மகிழ்ச்சி அடைவதை நிறுத்தி களத்தில் இறங்கி எப்போது விளையாட போகிறோம்? இதுவரை நாம் எதை கற்றுக் கொண்டோம்? எதை நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க போகிறோம்? இது நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான கேள்வி.

எதைக் கற்றுக் கொண்டோம்? எதை கற்றுக் கொடுக்கப் போகிறோம்?

அன்பு மகளே! மீண்டும் கவனி, நீ என் மகள் தான். ஆனால் என் சட்டையை போன்று, என் பேனாவைப் போன்று, என் மோட்டார் வாகனம் போன்று நீ என் உடைமைகள் அல்ல. நீ என் வழியாக இந்த உலகத்திற்கு வந்த உயிர். அவ்வளவு தான். நான் வாழ்ந்த உலகம் வேறானது. நீ வாழும் உலகம் முற்றிலும் வேறானவை. என் கனவை, என் இலட்சியத்தை உன் வாயிலாகவோ, உன் அண்ணன் மூலமாகவோ அடைவதற்கு நான் முயற்சி செய்தேன். ஆனால்  அது எவ்வளவு பெரிய தவறு என்பதை தற்போது கற்றுக் கொண்டேன்.

ஆகையால், என் லட்சியத்தை உன் மூலமாக அடைய நினைப்பது, உன் லட்சியத்தை உன் குழந்தைகள் மூலமாக அடைய முயற்சி செய்வது  பிற்போக்கு தனமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவன் , அவன் உலகம், அவன் சிந்தனை முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும். அப்படிப்பட்ட குழந்தையை ஒரு பொருளைப்போல் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்கிற ஆதிக்க மனப்பான்மையை கைவிட வேண்டும்.

அவர்களுக்குள் இருக்கின்ற சுதந்திரமான சிந்தனைகளை சிந்திக்க விடாமலும், அவர்களை செயல்பட விடாமலும் தடுத்து நமது சிந்தனைகளை, கொள்கைகளை, கருத்துகளை அவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்து 20,30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாலஸ்தீனத்தை சேர்ந்த கவிஞர், ஓவியர் மற்றும் தலை சிறந்த சிந்தனைவாதி கலீல் கிப்ரான் எழுதிய வரிகள் உனக்கு உதவி செய்யும் என்று நினைக்கிறேன்.

Khalil Gibran ,Lebanese-American writer and poet

 

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்” – கலீல் கிப்ரான்.

இந்த வரிகள் உன்னையும் உன் போன்ற பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையச் செய்யும். நாம் எல்லோரும் நம் குழந்தைகள் நம் உடைமைகள் என்று நினைக்கிறோம். அதனால் நமக்கு தெரியாததையும் தெரிந்த மாதிரி சொல்லி கொடுக்கிறோம்.

நான் பார்த்த பல வீடுகளில் குழந்தைகளை அடிமையை போன்று நடத்துகிறார்கள். வறுமை நிலையில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை அடகு வைத்து கொத்தடிமையாக மாற்றி விடுகிறார்கள். அதே நடுத்தர வசதி உள்ளவர்களோ தாங்கள் செய்ய முடியாமல் விட்டுவிட்டதை செயல்படுத்தவே  குழந்தைகள் தேவை என்று கருதுகிறார்கள்.

அந்த குழந்தைகளோ சமுதாயம் சொல்லி கொடுப்பதை கேட்பதா? ஆசிரியர்கள் போதிப்பது சரியானதா ? அல்லது பெற்றோர்கள் சொல்லி தருவது எந்த அளவிற்கு உண்மை என்று புரியாமல் குழம்பி முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் என்னையும் உன்னையும் போன்று சுயமாக சிந்திக்க முடியாமல் அடுத்தவர் சிந்தித்ததை, அடுத்தவர் வாழ்ந்த வாழ்க்கையை, கடன் வாங்கிய கொள்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ பழகிக் கொள்கிறார்கள்.

கலீல் கிப்ரான் சொல்கிறார்,“நமது மகள்களும் மகன்களும் வாழ்க்கையின் ஏக்கத்தில் உருவானவர்கள். அவர்கள் நம்மிடம் இருந்து வரவில்லை, நம் மூலமாக வருகின்றனர். அவர்கள் நம்மிடம் இருந்தாலும் நமக்கு சொந்தமானவர்கள் இல்லை” என்பதை மிக ஆழமாக குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசுவோம்..,

MUST READ