இந்தியா – பாகிஸ்தான் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடைபெறும் நிலையில், இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பாதிரியார் ஜெகத் கஸ்பர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:- பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, 54 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் போர் ஒத்திகை நடைபெறுகிறது. போரை நோக்கி இந்தியா நகர்வதை போல் தெரிகிறது. ஆனால் அமைதியை விரும்புகிறவர்கள், அடிப்படையில் போருக்கு எதிரானவர்கள் இந்த போரால் நமக்கு நடக்கப்போவது அதிக நன்மையா? தீமையா? என்று கேட்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் என்பது மிகவும் கொடுரமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மிக துல்லியமாக திட்டமிடப்பட்டு உள்ளது. திட்டமிட்டவர்களின் நோக்கம் கூட இந்தியாவிற்குள் ஒரு மதவெறி சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் பாகிஸ்தானின் அல்லது அவர்களது பிராக்சிக்கள் ஆன லஷ்கர் இ தொய்பா, அவர்களது கிளை அமைப்பாக வந்துள்ள தி ரெசிஸ்டன்ட் போர்ஸ் ஆக இருக்கலாம். அந்த அவர்களின் நோக்கம் மிக தெளிவாகவே தாக்குதலில் தெரிகிறது. அவர்கள் விரிக்கின்ற வலையில் அல்லது திட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டுமா? என்கிற கேள்வி எழுகிறது.
முக்கியமாக நாம் கேட்க வேண்டியது ஏன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாம் தவறினோம். மும்பை தாக்குதலே, நாடாளுமன்றத் தாக்குதலோ எடுத்துக்கொண்டால் அந்த பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டார்கள். அவர்களோடு நமது பாதுகாப்பு படையினர் மோதினார்கள். குறைந்தபட்சம் விரைந்து வந்து அந்த பயங்கரவாதிகளை எதிர்கொள்கிற அளவுக்காவது நமது பாதுகாப்பு ஒழுங்குகள் சரியாக இருந்தன. ஆனால் பஹல்காம் தாக்குதலில் இவ்வளவு எளிதாக தீவிரவாதிகள் வந்து, அப்பாவிகளை கொன்றுவிட்டு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பாதுகாப்பாக திரும்பி சென்றுள்ளனர். அப்போது நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளும் கேட்க வேண்டும். அதற்கு பொறுப்பும் ஏற்க வேண்டும். காஷ்மீரின் பொருளாதாரம் வளர்ந்து விடக்கூடாது என்று அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் வருகை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். யாரும் சென்று அங்கு முதலீடு செய்யக்கூடாது. எனவே பாகிஸ்தான் விரிக்கின்ற அந்த வலைக்குள் போரின் மூலம் விழக்கூடாது என்பதுதான் அறிவுரையாகும். அதற்காக நாம் எந்த பதிலடியும் தரக்கூடாது என்று இல்லை.
போருக்கு செல்வது என்று வைத்துக்கொள்வோம் என்றால் அதற்கான காரணங்கள் இந்தியாவுக்கு இருக்கிறது. ஒப்பீட்டளவில் பாகிஸ்தானை விட மிக அதிகமான எண்ணிக்கையிலும், அதிகமான பலத்திலும் தான் இந்திய ராணுவம் இருக்கிறது. ஆனால் முழு அளவிலான போரை நடத்துகிற அளவுக்கான வலிமையோடு இருக்கிறது என்றால், ஒரு ராணுவ பார்வையாளனாக நாம் இருக்கிறோமா? என்றால் இல்லை. ஏற்கனவே 30 சதவீத ராணுவ வீரர்கள், காஷ்மீரில் எல்லைப்பகுதிகளை காக்கின்ற பணிகளில் தான் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு 30 சதவித வீரர்கள் வடகிழக்கு பகுதிகளில் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 60 சதவீத ராணுவனத்தினர் பாதுகாப்பு பணிகளில் உள்ளனர். எஞ்சியுள்ள 40 சதவீத ராணுவ வீரர்கள் போருக்கான முழு ஆயத்த நிலையில் இருப்பார்களா? என்பது தெரியாது. பாகிஸ்தான் ராணுவம் நம்மைவிட வலிமையில் குறைந்ததுதான். ஆனால் ஒரு வியப்பூட்டும் தன்மையை நம்மால் கொடுக்க முடியாது. காரணம் அப்பாவி மக்களை தாக்க வேண்டும் என்று 26 பேரை கொல்வதற்கு அவர்கள் பயங்கரவாதிகளை அனுப்பி இருந்தால், அவர்கள் போருக்கான ஆயத்தை செய்துவைத்துக் கொண்டுதான் அனுப்பி வைத்திருப்பார்கள். இதற்கு இந்தியா பதிலடி தரும்.
இரு காரணங்களுக்காக இந்த போர் வரக்கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன். நமக்கும், பாகிஸ்தானுக்குமான போர் வரலாறு 1947ஆம் ஆண்டிலேயே தொடங்குகிறது. ஒன்று இந்திய – பாகிஸ்தான் பிரிவினை. மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ரத்தகளறியான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கணக்குகள் இருக்கிறது. அப்போதும் இஸ்லாமியர்களில் மூன்றில், இரண்டு பங்கினர்தான் பாகிஸ்தானுக்கு போகிறார்கள். ஒரு பங்கினர் இங்கேயே தங்கிவிட்டனர். 1965ல் ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்கிற பெயரில் போர் நடைபெற்றது. மிகவும் உக்கிரமான அந்த போர் தாஷ்கண்ட் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. 1971ஆம் ஆண்டு போர் மூண்டதன் மூலம் வங்கதேசம் என்கிற தனி நாடு உருவாகியது. சிம்லா ஒப்பந்தம் மூலம் அந்த போர் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு கார்கில் போர் நடைபெற்றது. இவற்றுக்கு பின்னர் பிராக்சி யுத்தத்தை தொடங்கினார்கள். நேரடியாக சண்டைக்கு வராமல் லஷகர்- இ- தொய்வா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத குழுக்களை உருவாக்கி போரை நடத்துகிற முடிவுக்கு வருகிறார்கள். கார்கில் யுத்தத்தின்போது இந்தியாவுக்கு பெரிய அளவிலான இழப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் நம்மை காப்பாற்றியது அமெரிக்கா தான்.
தற்போது இந்த போர் தேவையா? நம்மால் வெற்றி பெற முடியுமா? என்று பார்க்கிறபோது, இந்திய ராணுவம் வலிமை மிக்கதாக உள்ளபோதும் ஒரு முழு போரை வெல்லும் அளவுக்கு வலிமை மிக்கது அல்ல. காரணம் 60 சதவீத ராணுவ வீரர்கள் ஏற்கனவே எல்லைகளை காத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இன்றைக்கு சீனா, 2 மிகப்பெரிய திட்டங்களில் பாகிஸ்தானில் முதலீடு செய்துள்ளது. ஒன்று சீனா – பாகிஸ்தான் எகனாமிக் காரிடார். மற்றொன்று பெல்ட் அண்ட் ரோடு திட்டம். ஒரு முழுமையான போருக்கு செல்கிறபோது இந்த திட்டங்களை பாதிக்காமல் போரிட முடியாது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கும். அது நமக்கு எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.
அதைவிட முக்கியமானது இரு நாடுகளும் அணு ஆயும் வைத்துள்ள நாடுகளாகும். அப்படி பட்ட நாடுகள் போருக்கு வருகிறபோது, அது அணு ஆயுதப் போராக முடிந்தால் அந்த விளைவுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது. அதன் விளைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகும். மும்பை தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை பைனான்சியல் வாட்ச் லிஸ்ட்டில் போடுவார்கள். அப்படி பாகிஸ்தானை போட்டதால் அவர்களால் ஐஎம்எப், உலக வங்கியில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதுதான் பாகிஸ்தானை ஓரளவுக்கு படிய வைத்தது. நாம் நடத்திய போர்கள் அல்ல.
உலக நாடுகள் அனைத்தும் நம்மோடு இருக்கிறார்கள். ஆனால் போருக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. எனவே இந்த உலக ஆதரவை நாம் இழந்துவிடக்கூடாது. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுக்கு முயற்சிக்காமல், ராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவர விரும்பினால் பீகார் தேர்தலில் வெற்றி பெறலாம். ஒருவேளை 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் பயங்கரவாத்தை நிறுத்த முடியாது. போர்ச்சுசூழலை நிறுத்த முடியாது. அழிவுகளுக்கு தான் நீங்கள் நடத்திச் செல்வீர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.