Homeசெய்திகள்கட்டுரைமத வழிபாட்டுத்தல விவகாரம்: உறுதிபடுத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு... தராசு ஷியாம் அதிரடி! 

மத வழிபாட்டுத்தல விவகாரம்: உறுதிபடுத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு… தராசு ஷியாம் அதிரடி! 

-

- Advertisement -

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டம் அரசியலமைப்பு படி  செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், அதனால் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் வலது சாரிகளின் வாதம் எடுபடாது என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- திருப்பரங்குன்றம் கோவிலில் முருகன் முதலில் வந்ததால், சிக்கந்தர் தர்கா இருக்கக்கூடாது என்றும், அந்த இடம் இந்துக்களுக்குதான் சொந்தம் என்றும் வலதுசாரி அமைப்புகள் கூறுகின்றனர். அப்படி என்றால் திருப்பரங்குன்றத்தில் சமணர்கள் வந்த பிறகுதான் முருகன் ஆலயமே வந்திருக்கும். இதுபோன்று பார்த்தால் உலகில் எந்த வழிபாட்டு தலமும் இருக்க முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தேவாலயங்கள் உள்ளது என்றால், அது பழங்குடி மக்களின் வழிபாட்டு தலங்களை இடித்துதான் கட்டினார்கள். பல்வேறு சிவன் கோவில்கள் அப்படிதான் கட்டப்பட்டதுதான். ஒரு மதத்தின் மேலாண்மை வரும்போது பழைய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும். நீங்கள் அதை தோண்ட ஆரம்பித்தால் உலகில் எந்த நாடும் ஒற்றுமையாக இருக்க முடியாது. அதை தான் ஆபத்தான போக்கு என்கிறேன். சரித்திரத்தின் பிழைகளை யாராலும் திருத்த முடியாது.

சீனாவில் தோண்டிக் கொண்டே சென்றால் தங்கம் கிடைக்கிறது. இங்கே தோண்டிக்கொண்டே போய் சிவ லிங்கத்திற்குதான் போகிறோம். அனைத்து மசூதிகளையும் தோண்டினால் வேறொரு வழிபாட்டுத்தலம்தான் வரும். அதற்குதான் நாம் வழிபாட்டு தலங்கள் தொடர்பான 1991ஆம் ஆண்டு சட்டத்தை கொண்டு வந்தோம். அந்த சட்டத்தின்படி குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் என்ன வழிபாட்டு தலம் இருந்ததோ, அதற்கே உரிமை என கூறப்பட்டுள்ளது. அதனை மீறியதால்தான் சமீபத்திய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போது மீண்டும் இதுபோன்ற ஒரு பிரச்சினையை எழுப்ப முடியாது.

திருப்பரங்குன்றம் கோவில் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது என்பது, மக்களின் போராடும் உரிமையை மதிப்பது என்பது தான். அதற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் என்பது மிகவும் உயரியது. அதன் பாதுகாவலர் உச்சநீதிமன்றம் ஆகும். உச்சநீதிமன்றம் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான சட்டம் அரசியலமைப்பு சட்டப்படி செல்லும் என்றும் கூறிவிட்டது. அது தொடர்பான தாவாக்கள் எல்லாம் தடை விதிக்கப்பட்டு விட்டது. மேலும் வழிபாட்டு தலங்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வழிபாட்டு தலங்கள் விவகாரத்தில் புதிய தாவா உருவாக்க முடியாது. அதனால் திருப்பரங்குன்றம் உள்பட எந்த ஒரு மத வழிபாட்டு தலம் தொடர்பான தாவாக்களும் நீதிமன்றத்திற்கு கொண்டுவர முடியாது.

வலதுசாரிகள் கையில் எடுத்துள்ள திருப்பரங்குன்றம் விவகாரம் மீண்டும் அருவருப்பை தான் கொடுக்கும். இந்த விவகாரத்தில் இருக்கும் அரசியல் பின்னணி மதுரையில் இருக்கும் மக்களுக்கு தெரியும். நீங்கள் இதேபோன்ற தாவாக்களை திருச்செந்தூர் போன்ற ஒவ்வொரு இடங்களில் உருவாக்கி கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. இயல்பாகவே இஸ்லாமிய வழிபாட்டு தலங்களும், இந்து வழிபாட்டு தலங்களும் பக்கம் பக்கமாக நிறைய நாம் பார்க்கலாம். சபரிமலை சாஸ்தா முதல் நிறைய இடங்களில் இஸ்லாமிய வழிபாடு சேர்ந்துதான் இருக்கும். கோவில்களில் துலுக்க நாச்சியார் வழிபாடு உள்ளது. ஆயிரம் விளக்கு தர்காவில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், எவ்வளவு இந்துக்கள் வருகிறார்கள்.

தமிழர்கள் இறைநேசர்கள், சாதுக்களை வழிபாடுகிறார்கள். சூபி வழிபாடு வடமாநிலங்களில் பிரபலமானது. சத்ரபதி சிவாஜியின் தந்தை சுபி வழிபாட்டினால் பிறந்தவர். அதேபோல், அவுரங்கசீப்பின் மூதாதையர்கள் சூபிகளின் அருளால் பிறந்தவர்கள். சரித்திரம் நமக்கு ஒற்றுமையை தான் போதிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்காக அந்த ஒற்றுமையை பலி கொடுக்கிறார்கள். அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றோர் மீண்டும் மீண்டும் அதே அதே தவறை தான் திரும்ப திரும்ப செய்கிறார்கள். சாதி அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்பது மிகவும் தவறு. குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், மக்கள் அவரது கட்சியின் நிலைப்பாட்டை தான் பார்ப்பார்கள்.

அந்த காலத்தில் மதுரை மத்திய தொகுதியில் ஜனசங்கம் நிறுத்திய வேட்பாளர் 1,500 வாக்குகள் தான் விழுந்தது. பொதுமக்கள் சாதி பார்த்து வாக்களிப்பது கிடையாது. திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசுக்கு வேறு வழி இல்லாததால் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. வீட்டுக்காவல், கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இனி நீதிமன்றம்தான் பொறுப்பாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ