திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி மறுத்துள்ளது சரியான முடிவு என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வஞ்சக வலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது என்றும் தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ. கருப்பையா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்தும், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்தும் பழ.கருப்பையா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சென்னையில் வேல் யாத்திரை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜகவினர் நிறைய தூரம் வேலை தூக்கிக்கொண்டு அலைந்து அலைந்து கலைத்து போனார்கள். தற்போது மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் கொஞ்ச காலம் வேலை தூக்கிக்கொண்டு அலைந்தார். பின்னர் வேலைக்கு ஆகாது என்று வேலை விட்டு விட்டார். பாஜகவினருக்கு எப்போது எல்லாம் கடுப்பு ஏற்படுகிறதோ அப்போது வேலை தூக்கிவிடுவார்கள். திருப்பரங்குன்றத்திலே உள்ள மலை மீது முஸ்லீம்களுக்கு இடம் வழங்கக்கூடாது என்று சென்னையில் ஏன் வேலை தூக்கிக்கொண்டு போகிறாய்?. உயர்நீதிமன்றம் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. எதற்காக பிறருடைய மத உரிமைகளை மறுதலிக்கிறாய். நான் விடாமல் முஸ்லீம்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஆர்எஸ்எஸ்-ன் வஞ்சக வலையில் விழுந்து விடாதீர்கள் என்று. நவாஸ் கனி அங்கே செல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. இவர் போனவுடன், ஆர்எஸ்எஸ் பாஜக திரும்ப கூலிக்கு ஆட்களை கூட்டி வந்து இறக்கி பெரிய கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். இதனால் மீண்டும் சர்ச்சை ஆகிறது. உயர்நீதிமன்றம் அவர்களை யாத்திரை செல்வதறகு அனுமதிக்கவில்லை.
தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் என்றும், கிறிஸ்துவர்கள் என்றும் மற்ற மக்கள் என்றும் வேறுபாடு கிடையாது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் எதிர்ப்பை உண்டாக்கியது போல, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் மோதலை உண்டாக்க பார்க்கிறார்கள். அதன் வாயிலாக தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் நான் முஸ்லீம்களுக்கு சொல்லுவேன். தமிழக மக்கள் உங்களுக்கு இணக்கமானவர்கள். நாகூர் ஆண்டவர் கோவிலுக்கு போவதிலே அவர்கள் தான் பெரிய கூட்டம். நீங்கள் சிறிய கூட்டம். சீரடி சாய்பாபாவை கடவுளாக கொண்டாடுவது அவர்கள் மட்டும்தான். ஆகவே உங்களுடைய மக்களின் மீதோ, உங்களுடை மதத்தின் மீதோ, உங்களது வலிமார்கள் மீதோ அவர்களுக்கு எந்த பகையும் இல்லை. ஆர்எஸ்எஸ் அதை பகை ஆக்க முயன்றால் கெட்டிக்காரத்தனமாக அடங்கி இருங்கள். உங்களுடைய எதிரி மோடியே தவிர, உங்களுடைய நிலைப்பாடு ஷரியத் சட்டங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தவிர, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிருங்கள். சிக்கந்தர்மலையில் இன்று போய் ஆடு வெட்டி அந்த ரத்தத்தை தெறிக்கவிட்டு வந்தால் இஸ்லாம் நின்றுவிடுமா? உங்கள் உரிமைகள் நின்றுவிடுமா? அற்பத்தனங்களில் போய் சண்டையிடுகிறீர்கள் பின்னர் பெரிய காரியங்களில் கோட்டைவிட்டு விடுகிறீர்கள். ஆகவே அந்த மக்களுக்கு புரியவையுங்கள்.
திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் தற்போது உயர்நீதிமன்றமே சொல்லி விட்டது. இதுபோன்ற காரியங்களில் எல்லாம் ஊர்வலம் போகக் கூடாது என்று. மத உரிமைகளில் பிணக்கு வராமல் பார்த்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதுதான் முஸ்லீம் மக்களுக்கு சொல்வது. பெருவாரியான மக்களை, உங்களோடு இருக்கின்றவர்களை அவன் வஞ்சக வலையில் வீழ்த்தி, தன்பக்கம் இழுப்பதற்கும், அவர்களை உங்கள் பகையாக்குவதற்கும் முயல்வானேயானால், அந்த முயற்சியில் நாமும் சேர்ந்து இன்னொரு பக்கம் கத்தியை தீட்டினால் கடைசியில் இது மக்களுக்கு இடையே இருக்கிற பிளவாக மாறிவிடும். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். இந்த மக்கள் சேர்ந்து வாழ்கிற மக்கள். இவர்களை வேற்றுமைப்படுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயல்கிறது. இதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவாத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும்
பாஜக தலைவர் ஹெச்.ராஜா ஒரு வருடம் சிறை செல்லப் போகிறார். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவர் வாழ்நாள் முழுக்க சிறையில்தான் இருக்க போகிறார். பிராமணியத்தை தூக்கி நிறுத்தி, அதுதான் இந்துத்துவம் என்று ஆக்கி, தமிழர்களையும், முஸ்லிம்களையும் அடிமைப்படுத்தி ஆகப் போவது என்ன? பெரியார் பிராமணர்களை எதிர்ப்பதற்காக கடவுள் எதிர்ப்பை கையில் எடுத்தார். ஆனால் தமிழ் மக்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் வழியாக கடவுளை அறிந்தவர்கள். ஆகவே கடவுளை விட முடியாததால் பிராமணர்களையும் விரட்ட முடியவில்லை. அப்போது இந்துத்துவாவை, பிராமணியத்தை எதிர்க்க வேண்டும் என்றால் நாம் இந்து மதத்தை, வேத மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை மக்களிடம் சொல்லி இருக்க வேண்டும். வேண்டும் என்றால் நாம் சைவர்கள், வைணவர்கள் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கலாம். அவனும் நாமும் ஒரு மதம் இல்லை. இந்து என்ற வார்த்தை சென்ற நூற்றாண்டில் தோன்றியது. இந்திய தேசிய விடுதலை இயக்கத்தை கட்டுவதற்காக ஒன்றுபடுத்தினார்கள். எப்போதும் ஒன்றுபடுத்தி விட்டால் அவன்தான் தலைமையில் இருப்பான். தமிழ்நாட்டில் அஜெண்டாவோடு பாஜக விடாமல் செயல்படுகிறது. நூறு ஆண்டுகளை கடந்த ஆர்எஸ்எஸ் இயக்கம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை போன்று இங்கு நுழைய முடியவில்லை. அண்ணாமலை போன்றோர் மத்தியில் பாஜக அதிகாரத்தில் இருக்கிறது. நாமும் ஒரு அதிகாரத்திற்கு போகலாம் என்று ஆடுகிறார். பிராமணரால் பாஜக கட்சியை வளர்க்க முடியவில்லை. தமிழில் இந்து என்ற சொல்லையே பாரதியார்தான் முதன் முதலில் அறிமுகம் செய்தார். அதற்கு முன்பு இந்து என்ற சொல்லே தமிழில் இல்லை. அதேபோல் பாரத மாதா என்ற சொல்லையும் அவர்தான் அறிமுகம் செய்தார்.
ஒரு மனிதர் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறக்க முடியும். 2 தாய்களின் வயிற்றில் பிறக்க முடியாது. எனக்கு ஒரு தாய்தான். நாம் தாய் வழியில் அடையாளம் காண்பது என்றால் தமிழ்த்தாயின் மக்களாகத்தான் அடையாளம் காண முடியுமே தவிர, பாரத மாதாவின் பிள்ளையாக அடையாளம் காண முடியாது. எந்த பாரத மாதாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது என்று காட்டுங்கள். மோடி குஜராத் மாதாவின் பிள்ளை, ஸ்டாலின் தமிழ்த்தாயின் மகன். இந்த மாதாக்களை எல்லாம் ஒழிப்பதற்காக நீங்களாக சொல்லிக் கொண்டீர்கள் பாரத மாதாவின் பிள்ளை என்று. தமிழ்த்தாய் இருக்கக் கூடாது. ஆனால் இல்லாத பாரத மாதா இருக்க வேண்டும். பாரதியே பாரத மாத திருப்பள்ளி எழுச்சி பாடினானே. இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகையில் பாரத மாதா வழியில் நான் பிறந்தேன் என்று ஒருவர் சொல்லட்டும். குஜராத்திக்காரன் குஜராத் தாய்க்கு பிறந்தான், நான் தமிழ்த்தாய்க்கு பிறந்தேன். என்னுடைய தேச பக்தியை அளப்பதற்கு பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பினர் யார்? நான் காந்தியை பின்பற்றுபவன். இந்தியாவை நேசிக்கின்றவன். ஆனால், தமிழ்த்தாய் என்பதும், தமிழ் மண் என்பதும் தான் எனது முதல் அடிப்படை. ஏனென்றால் இவை எல்லாம் ஒன்றாக சேர்க்கப்பட்டு உருவான நாடுதானே இந்தியா தவிர, இயற்கையாக உருவான நாடு அல்ல இந்தியா.
பாரதி ஏன் இந்தியா இருக்க வேண்டும் என்பதற்கு 3 காரணங்களை சொல்கிறார். முதலாவதாக பெரிய சந்தை ஏற்படும் என்றார். இரணடாவதாக கங்கையில் தண்ணீர் நிறைய ஓடி போய் கடலில் வீணாக கலக்கிறது. அதை திருப்பி வறண்ட தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தால் நாம் வாழ மாட்டோமா? என்றார். இது சரியான சிந்தனைதான். ஆனால் கிருஷ்ணா, கோதாவரியில் வீணாகும் தண்ணீரையே நம்மால் பெற முடியவில்லை. நதி நீரை இணைப்பதற்கு அரசுகள் சிறிதளவாவது முயற்சிகள் மேற்கொண்டார்களா?, ஒரு கரிகாலன் கல்லணை கட்டவில்லை என்றால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வறண்டு போயிருக்கும். மிகவும் நேர்மையான கவிஞரான பாரதியார், அடிப்படையில் ஒரு பிராமணர். அதனால் அவர் இந்துத்துவம், பாராத மாதா, விவேகானந்தர், நிவேதிதா என்றுதான் நிற்பார். நான் கனியன் பூங்குன்றன், திருவள்ளுவர், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் என்று தான் நான் நிற்க முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.