மாநில அரசுக்கு பல்வேறு விதமாக நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்துவதாகவும், ஒரு சிக்கலான கால கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் என்றும் ஒய்வுபற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி மொழி படிப்பதை தமிழ்நாடு அரசு தடுத்தால் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி திமுக அரசை கலைப்போம் என்றும் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக பாலச்சந்திரன் ஐஏஎஸ் அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 356 என்ன சொல்கிறது என்றால் ஒரு மாநிலத்தில் அரசமைப்பு சட்ட அமைப்புகள் தோல்வி அடைந்தால், மத்திய அரசு அந்த மாநிலத்தின் சட்டப்பேரவையை முடக்கிவிட்டு ஆட்சியை கலைத்துவிடலாம் என சொல்கிறது. 1977ல் இந்திரா காந்தி தோல்வி அடைந்த உடன் ஆட்சிக்கு வந்த ஜனதா தளம், காங்கிரஸ் ஆளும் 8 மாநில அரசுகளை கலைத்துவிட்டார்கள். 1979ல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் ஜனதா தளம் அரசுகள் எல்லாவற்றையும் களைத்துவிட்டார். கூடவே எம்ஜிஆர் அரசாங்கத்தையும் சேர்த்து கவிழ்த்து விட்டார். அப்போது நான் என்ன தவறு செய்தேன்?. எனது அரசாங்கத்தை ஏன் கலைத்தார்கள் என எம்ஜிஆர் பொதுமக்களிடம் கேட்டார். மக்களின் அனுதாபமும் அவருக்கு இருந்தன.
அதன் பிறகும் பொம்மை என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன காரணங்களுக்காக ஒரு மாநில அரசை கலைக்கலாம் என தெளிவாக சொல்லிவிட்டது. இப்போது ஒரு மாநிலத்திற்கு என்று கல்விக்கொள்கை இருக்கிறது. அந்த கல்விக்கொள்கையின் படி நாங்கள் 2 மொழிகள் தான் கற்றுக்கொடுப்போம் என்று சொன்னால், அது ஃபெயிலியர் ஆப் கான்ஸ்டியூஷன் மிஷனரி கிடையாது. இதை சுப்பிரமணியன் சுவாமி நன்றாக அறிந்திருப்பார். மிரட்டல் தொணி என்பது பொது பாஜகவினரிடம் அதிகமாக உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது மத்திய அரசு எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காவிட்டால் நாங்கள் வரி கொடுக்க மாட்டோம் என்கிறார். இவர் வரி கொடுக்காவிட்டால் டிஸ்மிஸ் செய்வேன் என்கிறார்கள். அப்போது இவர்கள் தர வேண்டிய நிதியை தராததற்காக மத்திய அரசை யார் டிஸ்மிஸ் செய்வார்கள்?.

மாநில அரசுக்கு பல்வேறு விதமாக நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது என்பது உண்மை. ஒரு சிக்கலான கால கட்டத்தில்தான் இருக்கிறோம் என நான் நினைக்கிறேன்.முறைப்படி தேர்ந்தெடுந்தக்கப்பட்டவர்கள் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நாடாளுமன்றத்திலேயே கேட்டுவிட்டார். பெண் ஒருவர் அதிகமாக பேசினீர்கள் என்றால் அமலாக்கத்துறையை அனுப்பி உள்ளே வைத்துவிடுவேன் என மிரட்டினார்கள். இது எவ்வளவு பெரிய தவறு. இப்படி எல்லாம் மிரட்டக்கூடாது என்று பாஜக அவருக்கு அறிவுறுத்தியதா? தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்வது மிகப்பெரிய தவறு என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எந்த சட்டங்களை இயற்றினாலும் அவற்றை நீங்கள் ஆமோதிக்க வேண்டும். அது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டதாக இருந்தால். அப்படி மாநில அரசின் சட்டம் பிற மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் மட்டுமே நீங்கள் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும். மாநில அரசின் மசோதாவில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் திருப்பி அனுப்பலாம். ஆனால் அதே மசோதாவை மீண்டும் அனுப்பினால் நீங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேணடும். தமிழக ஆளுநர் 2 வருடங்களாக மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு, தமிழக அரசு மறுபடியும் தீர்மானம் போட்டு அனுப்பியபோது, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதை எல்லாம் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுயள்ளது. இது மிகவும் சிறுபிள்ளை தனமானது.
ஆளுநரோ, அல்லது சுப்பிமணிய சாமி போன்ற பெரிய தலைவரோ இது மாதிரி பேசுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் நிறைய தமிழ் சிறுபான்மையினர் உள்ளனர். அங்கு தமிழ் கற்றுத்தரவில்லை என்றால் உ.பி. அரசை டிஸ்மிஸ் செய்து விடுங்கள் என்று சொல்லிவிட முடியுமா? ஏன் சிறுபான்மையினருக்கும் என்று சட்டம் உள்ளது அல்லவா? உரிமைகள் உள்ளது அல்லவா? அது குறித்து என்ன என்ன பேசுகிறீர்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுப்பது கிடையாது. யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில், அட்டவணையில் உள்ள எந்த மொழிகளில் வேண்டும் என்றாலும் தேர்வு எழுதலாம் என வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். நீங்கள் ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். நேர்முகத் தேர்வையும் தமிழ் மொழியில் செய்யலாம். ஆனால் முதனிலைத்தேர்வு கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் இருக்கும். பிற மொழிகளில் கிடையாது. கேட்டால் மொழி பெயர்ப்பு வல்லுநர்கள் இல்லை என்று கூசாமல் பொய் பேசுகிறார்கள் யுபிஎஸ்சி. அப்போது முதனிலை தேர்வில் தாய் மொழியில் தேர்வு எழுதுபவரை விட, வேறு மொழியில் தேர்வு எழுதுபவருக்கு கால தாமதம் ஆகும். அப்போது இந்தி பேசாதவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது என அவர்களை டிஎஸ்மிஸ் செய்ய சொல்வாரா?
2014 வரை இந்தியா எவ்வளவு கடன் வாங்கியதோ, அதை விட அதிகமாக இந்த 11 ஆண்டுகளில் பாஜக கடன் வாங்கியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் ஜிடிபியில் 60 சதவீதத்திற்கு மேல் வாங்க்கூடாது என்று விதிகள் உள்ளன. ஆனால் அதற்கு மேலாகவே இந்திய அரசு வாங்கியுள்ளது. பட்ஜெட்டின்போது நமக்கு வருமானம் வரும் இடங்கள் என்பதில் கடன் என்பது 24 சதவீதம் ஆகும். அடுத்து செவில் கடனுக்கான வட்டி, தவணை என அரசு செலவு அளிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 20 காசுகள் செல்கிறது. கல்விக்கு 2 முதல் 3 காசுகள் செல்கிறது. பாதுகாப்புத்துறைக்கு 7 முதல் 8 காசுகள் செல்கிறது. 20 காசுகள் செல்லாமல் இருந்தாலோ அல்லத குறைத்து இருந்தாலோ அந்த பணத்தை வைத்து நல்ல திட்டங்களை செயலாக்க முடியும் அல்லவா? அப்போது என்ன லட்சணத்தில் பாஜக இந்தியாவை ஆளுகிறது. நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முற்றிலும் அழிந்துவிட்டது. இந்த நாட்டில் பங்குச்சந்தைகள் தான் வளர்ந்து கொண்டிருந்தது. பொருளாதாரம் வளரவில்லை. விவசாயிகளின் வருமானம் தான் நாட்டின் உண்மையான வருமானம் ஆகும். கொரோனாவுக்கு பின்னர் விலைவாசி 50 சதவிதம் வரை உயர்ந்துள்ளது.2020ல் என் வருமானம் ரூ.3,000 என்றால் அதில் என்ன வாங்க முடிந்ததோ, தற்போது அதை வாங்க ரூ.4,500 தேவைப்படும். எனக்கு இன்று ரூ.4,500 சம்பளம் இல்லை என்றால் நான் ஏற்கனவே வாங்கும் அளவுக்கு வாங்கும் சக்திகூட எனக்கு இல்லை. இதுதான் விவசாயிகளுக்கு நடைபெற்றுள்ளது. இதனை மத்திய புள்ளியியல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அப்படி என்றால் நிர்வாக சீர்கேடு காரணமாக பொருளாதார அவசர நிலை பிறப்பிக்கலாமா?
பெண்களுக்கு இலவச பயணம், காலை உணவுத் திட்டம் போன்ற நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிற தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு ஒரு மொழிக்கொள்கை உள்ளது. 58 வருடமாக இருமொழி கொள்கையை செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது ஒரு மாநில அரசை யாரும் டிஸ்மிஸ் செய்யவில்லை. இப்போது எந்த அடிப்படையில் அரசை கவிழ்ப்பார்கள். தட்சண இந்தி பிரச்சார சபாவில் இந்தி அதிகம் கற்றுக்கொள்பவர்கள் நாட்டிலேயே சென்னையில் தான் அதிகம். அவர்கள் இந்தி கற்றுக்கொள்வதை யார் தடுத்தார்கள்?. இதை எல்லாம் அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்துவிட முடியாது. இப்போது பல தனியார் பள்ளிகளில் இந்தி சொல்லித் தரவில்லையே. மூன்றாவது மொழியாக ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகள் தான் சொல்லித்தருகிறார்கள். அப்படி என்றால் டிஸ்மிஸ் செய்து விடுவீர்களா?
ஒரு மாநில அரசு தேசத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ? அல்லது சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குலைழந்து மாநில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அப்போது இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம். மற்றபடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள், மக்களால்தான் தோற்கடிக்கப்பட வேண்டும். லஞ்சம் ஊழல் என்பது மிகப்பெரிய தவறு. அனைத்து அரசியல் கட்சிகளும் லஞ்சம் ஊழல் செய்கின்றனர். எந்த கட்சியை நீங்கள் பதவியில் வைத்திருப்பீர்கள். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் பாஜக உள்பட எந்த கட்சியையும் பதவியில் இருக்க முடியாது. அவர்களை மக்கள் தான் தோற்கடிக்க வேண்டும். அதுதான் சரியான ஜனநாயகம் ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.