மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆவடி காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் ஆவடி கலைஞர் நகர் பகுதியில் வசிக்கும் டிசைனரான சுந்தரமூர்த்தி (35) மேட்ரிமோனி மூலம் என்னை தொடர்பு கொண்டு, பழகி, என்னிடமிருந்து 1,50,000 ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்து விட்டதாகவும், சமூக வலைதளங்களில் பல மாற்று சாதி பெண்களுடன் தொடர்பு கொண்டும் மற்றும் திருமண வரன் பார்க்கும் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் பழகி பணம் நகை ஆகியவற்றை பெற்றுகொண்டு ஏமாற்றி விடுவதே வழக்கமாக வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
வடபழனி பகுதியில் திருமணமாகி கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி 6 மாதங்கள் பழகியதுடன், அவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் ஏமாற்றியதாகவும், அதேபோல் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் பல பெண்களை இவ்வாறு அவர் ஏமாற்றியதாகவும் அவர் அதில் குறிபிட்டுள்ளார்.
மாற்று ஜாதியின பெண்களை பல வழிகளில் காதலித்து திருமண ஆசைகள் கூறி பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபடும் சுந்தரமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆவடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் மேட்ரிமோனி மூலம் என்னை தொடர்பு கொண்டார். பின்னர் அவரது தங்கை பிரியா என்னை தொடர்பு கொண்டு எங்களுக்கு பெற்றோர் இல்லை. அதனால் எனது அண்ணன் சுந்தரமூர்த்தி என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என கூறினார். பின்னர் நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். பிறகு அவர் அடிக்கடி எனக்கு உடம்பு சரியில்லை கண்ணில் பிரச்சனை ஆபரேஷன் செய்ய வேண்டும் என சுமார் 1,50,000 ரூபாய் வரை என்னிடம் நேரில் வந்து வாங்கி சென்றார்.
பின்னர் அந்த பணத்தை நான் திரும்பி கேட்டபோது 2000 ரூபாய் மட்டும் எனக்கு வங்கி கணக்கில் அனுப்பினார். நான் மீதி பணத்தை கேட்ட போது என்னை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறினார். அது மட்டும் இல்லாமல் வடபழனியை சேர்ந்த மகா என்ற பெண்ணை திருமணமாகி விவாகரத்தான பெண்ணையும் அவர் இதே போல் 6 மாதங்கள் பழகி அந்த பெண்ணை ஏமாற்றியதும் அவரே என்னிடம் கூறினார்.
அந்த வடபழனியை சேர்ந்த மகா இவர் மீது புகார் கொடுக்க உள்ளதாக கேள்விப்பட்டேன். என் மீது புகார் கொடுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டவும் செய்கிறார். இவர் இதே போன்று தன்னை தாழ்த்தி மற்ற பெண்களின் மனதில் இடம் பிடித்து அவர்களிடம் பணம் நகை ஏமாற்றுவதை வேலையாகக் கொண்டுள்ளார்.
கடந்த 11ஆம் தேதி நான் இது குறித்து ஆவடி காவல் இணை ஆணையரை நேரடியாக சந்தித்து அவரிடம் புகார் அளித்தேன். தற்போது வரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும் அவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருப்பார். அவர் தலைமறைவாக இல்லை. வேறு பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.