ஆவடி அடுத்த பிருந்தாவனம் நகர் பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆவடி, பிருந்தாவனம் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (40). தாம்பரத்தில் உள்ள ஒரு பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இவர்களது 8 வயது மகன் நிச்சியிஷ், கௌரிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், காலை 11 மணியளவில் சிறுவன் நிச்சியிஷ் வீட்டின் அருகில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் உள்ளே இருந்து பூனை கத்தும் சத்தம் கேட்கவே, சிறுவன் உள்ளே சென்று பூனையைத் தூக்க முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பதுங்கியிருந்த சிறிய கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று சிறுவனின் சுண்டுவிரல் பகுதியில் கடித்துள்ளது.
உடனே சிறுவன் கடிக்கப்பட்ட தகவலைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் குறித்து ஆவடி டேங்க் ஃபேக்டரி (Heavy Vehicles Factory – HVF) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மின் வசதியின்றி தவிக்கும் எளிய குடும்பத்தில் நிகழ்ந்த இந்தத் திடீர் சோகம் அப்பகுதி மக்களிடையே பெரும் கண்ணீரை வரவழைத்துள்ளது.
கிண்டி ஒலிம்பியா சிக்னல் அருகே விபத்து: ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் சென்ற கார் மோதி நான்கு பேர் காயம்!
