ஆவடியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் தொட்டி நிரம்பி, சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப் பாதசாரிகள் கோரிக்கை
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இம்மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி முறையாகப் பராமரிக்கப்படாததால், அது முழுமையாக நிரம்பி வழிகிறது.

இவ்வாறு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது, ஆவடி புதிய ராணுவ சாலையின் பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நோய் தொற்று அபாயம் மருத்துவமனைக் கழிவுநீர் திறந்தவெளியில் சாலையில் வழிந்தோடுவதால் அப்பகுதி முழுவதிலும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பாதையைக் கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பாதசாரிகள் மூக்கைப் பொத்தியபடி செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே மருத்துவமனைக் கழிவுகளில் அதிகளவிலான கிருமிகள் நிறைந்துள்ள நிலையில், இந்தக் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தொற்றுநோய்கள் அதிவேகமாகப் பரவும் அச்சம் நிலவுகிறது. மேலும், சாலையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியிருப்பதால், பாதசாரிகள் நடந்து செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர்.
உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனையே, நோய் பரப்பும் மையமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்களும் நோயாளிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடியாக தலையிட்டு, அடைப்புகளை நீக்கி கழிவுநீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.
