ஆவடியில் சரிவர கல்லூரிக்கு செல்லாத மாணவியை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி வயது 45. இவர் கூலி தொழில் செய்பவர். இவரது மனைவி செல்லம்மாள் வயது 38. இவர்களுக்கு
இரண்டு இரட்டை பிறவி மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாம் மகள் தீபா வயது 17. ஆவடி சேக்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவி 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயின்றுள்ளார்.
தற்போது தமிழ் வழித்துறையை சார்ந்த படிப்பை படித்ததால் அவரால் சரியாக படிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. படிப்பில் ஆர்வம் இல்லாததால் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் மாணவி வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை மாணவியின் தாயார் செல்லம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத போது தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.