சென்னை அருகே வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த வினோத் (42) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (42), கோமதி (38) ஆகியோர், தாங்கள் வசித்து வரும் வீட்டை ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்வதாக கூறி , கடந்த வருடம் மே மாதம் வினோத் என்பவரிடம் அட்வான்ஸ் ஆக ரூபாய் 32 லட்சம் பெற்றுக்கொண்டு, அந்த வீட்டை வேறு ஒருவருக்கு ரூபாய் 1.6 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

வழக்கறிஞர் வினோத் செலுத்திய ரூபாய் 32 லட்சத்தை கேட்க சென்ற போது ஆள் வைத்து விரட்டியுள்ளார். இதுகுறித்து, ஆவடி காவல் ஆணையரகத்தில் வினோத் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருமுல்லைவாயில் குற்ற பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
