காக்கா முட்டை பட பாணியில் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கம்பு மூலம் தட்டி செல்போன் பறித்த இளைஞர்கள் கைது!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தின் ஒரு காட்சியில், படியோரம் நின்று கொண்டு பயணிக்கும் ரயில் பயணிகள் செல்போனில் மூழ்கி இருக்கும்போது, கம்புகளைக் கொண்டு கையில் தட்டி செல்போனை பறிக்கும் குற்றச் செயல் இடம் பெற்றிருக்கும்.
இதே பாணியில் வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் பயணிகளிடம் கம்புகளை கொண்டு செல்போனை தட்டி பறித்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக புகார் அளிக்கப்பட்டு வந்தது.
அதன்படி பெரம்பூர் ரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னை கன்னிகாபுரம் பிரவீன் என்கிற குட்டா, சுகுனேஷ் ஆகிய இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்களிடமிருந்து இதே பாணியில், திருடிய 10க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.