கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
பொதுவாக வார விடுமுறை தினங்களில் காசிமேட்டில் மீன்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர். சென்னை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் காசிமேட்டில் மீன்களை வாங்க வார விடுமுறை தினங்களில் அதிக மக்கள் கூடுவது வழக்கம். அந்தவகையில் விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். அதற்கேற்ப ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் அதிகாலையில் கரை திரும்பிய நிலையில், வஞ்சிரம், வவ்வால், கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்பட்டன.
இந்நிலையில் நேற்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கிய நிலையில் மீன்களின் விலை வீழ்ச்சடைந்துள்ளது. கடந்த வாரங்களில் விலை உயர்ந்த வஞ்சிரம், வவ்வால், கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்களின் விலை குறைந்துள்ளது. இந்தவாரம் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும், விற்பனை சற்று மந்தமாக இருப்பதாலும் மீன்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரங்களில் வஞ்சிரம் மீன்கள் கிலோ ரூ.1000 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.800 விற்பனை ஆகின்றன. அதேபோல் துண்டுகளாக சுத்தம் செய்யப்பட்ட வஞ்சிரம் விலை கிலோ ரூ. 1300 லிருந்து ரூ.1200 ஆக குறைந்தது. இதேபோல் கொடுவா ரூ. 500, ஷீலா ரூ.350 , பால் சுறா ரூ.400, கருப்பு வவ்வால் ரூ. 500, வெள்ளை வவ்வால் ரூ. 900, சங்கரா ரூ.350, பாறை ரூ.600, இறால் ரூ. 350, நண்டு ரூ.300, நாக்கு ரூ.400, கடோரா ரூ. 450 , கொடுவா ரூ. 600, கடம்பா ரூ.300, நவரை ரூ. 200, பண்ணா ரூ.200, காணங்கத்தை ரூ.250, நெத்திலி ரூ. 250 மற்றும் டைகர் இறால் ரூ.900 என கடந்த வாரத்தை விட அனைத்தும் மீன்களின் விலையும் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனையாகிறது.