வழக்கறிஞர்கள் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விளம்பரம் வெளியிட்டால் பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பார்கவுன்சில் அலுவலகத்தில் அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வழக்கறிஞர்கள் விளம்பரங்களை வெளியிடுவது பார்கவுன்சில் விதி 36-ன் படி சட்டவிரோதமானது என தெரிவித்தார். வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகவோ போஸ்டர், பேனர் மற்றும் சமூக வலைதளங்களில் எந்த வித விளம்பரமும் செய்ய கூடாது என அமல்ராஜ் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் ஒரே நாளில் உத்தரவு வாங்கி தரப்படும் எனக்கூறி பலரிடம் பெரும் தொகை பெற்று ஏமாற்றபடுவது குறித்து புகார்கள் பார் கவுன்சிலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தி இருப்பதாகவும் மீறி விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும் என்று பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் எச்சரித்துள்ளாா்.

மேலும், வழக்கறிஞர்கள் சட்டம் குறித்த சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த எந்த தடையும் இல்லை என தெரிவித்த அமல்ராஜ், நிலம் தொடர்பான வழக்குகளில் கூட சம்பந்தப்பட்ட நிலத்தில் வழக்கறிஞரை வைப்பது விளம்பரம் தான் அதுவும் சட்டவிரோதமானது தான் எனவும் தெரிவித்தார். வழக்கறிஞர் விளம்பரம் வெளியிடுவது தொடர்பான புகார்களை பொது மக்கள் பார் கவுன்சில் இணையதளம் மூலம் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் மீது இதுவரை 2017 ஆண்டு முதல் 500 க்கும் மேற்பட்டோர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


